சனி, 21 மே, 2011

காற்று வெளியில் கவிதை பயணம்




பரம பாதம்



வெகு நாட்களாய்
தவமிருந்தது
இதற்காகத்தான்.

வெறிச்சோடிக் கிடந்த வீதியில்
விதியை தலைக்கு வைத்து
படுத்திருக்கும்
பித்து பிடித்தவளிடம்
கொடுத்துவிடலாம்.

ஒன்பதங்குல பாதம்
நிச்சயமவள்
தொலைத்ததில் ஒன்று தான்
தொலைந்தபோது
ஆறேகால் அங்குலம்.

மரமாசாரி எவரோ
செதுக்கி இழைத்திருப்பார்
திரள் திரளாய்
தேய்ந்திருக்கிறது பாதம்.

நாலாபக்கமும்
விரல்களோடு சேர்ந்த
வளர்ச்சி உப்பியிருந்தது.

விட்டுப்போயிருந்த
விரல்களின் பதிவில்
மரப்பல்லியளவு புடைத்த
விடுபடாத ஞாபகங்கள்.

யாரேனும்
குத்தகைக்கெடுத்து
சுட்டெரிக்கும் வெயிலில்
நடத்தியிருக்கலாகும்
ஒட்டகம் மேய்ப்பதற்கென..
மரமரத்த தடயங்களிருந்தது.

நெருஞ்சி முள்
தைத்த துளைகள்
துளியேதும் மூடப்படாமல்..
வனங்காட்டு ஜாகையில்
கொத்தடிமை கொத்தில்
அடைபட்டு மீட்டப்பட்டிருக்கலாகும்.

இருப்பினுமிந்த
சப்பைக்கால் பாதம்
அழகேசனுடையாதாய் யிருக்கும்
காவலர் தேர்வில்
கழிக்கப்பட்ட பாதம்
கவனமீர்த்திருக்கும் அந்நாளில்.

பித்த வெடிப்பின்
இரத்த கசிவு கரைகளை
எவர் வந்தேனும்
பார்வையிடலாம்
சாட்சி சம்பிரதாயங்கருதி..
ஆமணக்கு எண்ணெய்
வெடிப்பின் வாய்காலூற்றி
அழுத்தி தேய்த்த ஆத்தாளை
அடியோடு மறந்த பாதம்.

'வெண் தாமரை
செந்தாமரை
பொற்றாமரை
வஜ்ஜிர தாமரை'யென
செல்ல பாதம் பிடித்து
கொஞ்சி முத்தமிட்டு
அப்பத்தாள் கொட்டிய பாசத்தில்
வழிந்தோடிய பாதம்.

கண்களில் லொற்றி
அள்ளிய பாதத்தை
இடுப்போரம் சொருகிக் கொள்கிறாள்.
எதிர்திசை பரவி
ஓடோடி வரும் இன்னொரு பாசம்.

ஊர் உடுத்திய அழுக்கு
வெளுத்து துவைக்கும் நதியோரம்
படித்துறை வழுக்கி
பரிதவிக்கவிட்டு போனதவள்
பத்திரை மாத்து பாதமென
மார் தட்டியழுகிறாள்.

ஒரே பாதம்
ரெட்டிப்பு பாசம்
ஒப்படைப்பது யாரிடமெனும்
கேள்விக்கு மத்தியில்
பாதம் தொட்டு தழுவி
பணிந்து யாசிக்கிறது
பழைய பாதம்
தொடர்பில்லா தூரத்தே
தொலைத்து விடச்சொல்லி ..


நன்றி : கீற்று இணைய இதழ்





புன்னகை பூக்கள்



மனசுக்குப் பிடித்திருக்கும்
மலர்க் கொத்தில்லாத
அந்த வரவேற்ப்பு.

புன்னகை பதியமிட்ட
பூங்கொத்தே
போதுமானது.

நெஞ்சச் செடிகளில்
பன்னீர் மலர்கள்
பூத்துக் கொள்கின்றன.

ஒப்பனைகள்
வாடிப் போகிறது.
நன்றி : கீற்று இணைய இதழ் 



பணிதல்


அகல் விளக்கின்
சுடர் மொட்டுகள்
கசிந்த வெப்பத்தில்
காற்று வெளியின்
கன்னம்
சூடேறி போகிறது.
கோபத்தில் வளி
தீபத்தை
அணைக்க முயல்கையில்
உள்ளங்கை கூப்பி
மன்னிப்பு கேட்டு
தாழ்பணியும்
இளஞ் சுடர்
பணிதலின் வியாக்ஞானம்
பளிச்சென
சொல்லி போகிறது !
நன்றி  :  வார்ப்பு இணைய இதழ்


 வெளி ...

பல நூறு மைனாக்கள்
பறந்தன வானில்
வேடநெங்கே
வலை விரிப்பான்???
 நன்றி :  கூடல் இணைய இதழ் 
 
 








































சனி, 7 மே, 2011

இயலாதோருக்காக...

அன்பானவர்களே,

மின்சார இரயில் பயணம் பெருவாரியான மனதில் மின்சாரம் பாய்ச்சியிருக்கும் . பார்வையற்றோர் பலரின் பாட்டு தாலாட்டில் 'தடக் ' ' தடக்' கென நடனமாடி கொள்கிறது இரயில். உச்ச சுரத்தில் சிலரின் பாடல் உயிரின் ஆழம் பார்த்து தூர் தொட்டுவிடுகிறது .

இப்போதெல்லாம் நானந்த பயணம் நேசிக்கிறேன் .
" இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை "
நாகூராரின் பாடலில் நெஞ்சோரம் ஈரம் கசிந்திருக்கத்தான் வேண்டும். இயலாதவர்கள் இறைவனை யாசிக்க இயல்பு மனிதர்கள் இவரை நேசித்தாக வேண்டும்.

" பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு " -- அவரின் குரலில் சிறகடிக்கிறது பலரின் நிம்மதி.
இருபது நிமிடத்தில் எனைப்போல் இதயம் தொலைத்தவர்கள் எத்தனைபேர். உதவும் கரங்களில் ஊரிக்கொண்டேதானிருக்கும் இளகிய மனது.

இப்படித்தான் மாற்று திறனாளி யொருவர் மதிய வேலை இரயில் பெட்டியேற... இசைக்கான எம் செவிப்பறைகள் அசைந்து கொடுத்தன . அவர் தொடங்கினார் .

" கொடுத்ததெலாம் கொடுத்தார் - அதை
யாருக்காக கொடுத்தார் .
ஒருத்தருக்கா கொடுத்தார் - இல்லை
ஊருக்காக கொடுத்தார் "
அங்கேயொரு ஆச்சர்யம் உணர்ந்தேன் .
பயணிகள் அனைவரும் பைகள் துலவினர் .
" உனக்காக ஒன்று
எனக்காக ஒன்று "
தட்டின் காசொலி கணீரென கேட்டது . நடப்பவை நியாயமாக பட்டது .


யார் எவ்வளவு கொடுத்திருந்தாலும் பகிர்ந்துண் என்கிற கோட்பாடு அந்த வேளையில் எல்லோருடைய நெஞ்சிலும் சாட்டையடியாய் வலித்திருக்கும் .

நிறைந்த மனதோடு கொடுத்தன கைகள் . நிரம்பியிருக்கும் அத் திறனாளியின் கண்ணீர் பைகள் .
பல பார்வையற்றோரின் பலம் இதுதான் .

நம்மோடு பயணிக்கிறவர்கள் நலமோடு வாழ தலைக்கொரு 'சும்மாடு' சுமக்கலாம் .
பைகளில் கொஞ்சம் சில்லறைகளோடு பயணிப்போம் . இயலாதோரின் கல்லறைகளை தகர்த்தெடுப்போம்

அன்புடன்
கொ.மா.கோ.இளங்கோ

வியாழன், 28 ஏப்ரல், 2011

கலை கரைந்த ஓவியனாய் என்றென்றும் கவிஞர்

கலை கரைந்த ஓவியன்

மழை நேர
தண்ணீர் திவலைகள்...
கரையாதிருக்கும் பெருங்கல்

பிரபஞ்சத்தை வரையும்
தூரிகையோரம்
நனைந்து வழிகிறேன்
அழகானதுன் அமைகை
பாறையடியில் பத்திரமாய்
சிதறல்களின் இரைச்சலை நுகர்ந்தபடி...

எனக்கோ மழைக்கோ பயந்து
யாரென்று உணரும் தயக்கத்தில்
பாதம் வருடி
ஒதுங்கிக்கொள்கிறது
கடல் நத்தை

இயற்கையை, இயல்புகளை
எழுத்தாக்கும் ஓவியன் நானென்று
சொல்ல தவிக்கையில்
உள்ளங்கை தவழ்ந்து
உணர் கொம்புயர்த்தி
இதயமுணர்கிறது நத்தை
முத்தத்து வாசனை இணக்கத்துடன்...

ஓட்டில் தொடர்ந்த ஓவியத்துள்
நீ மட்டுமே நிறைகிறாய்!
வண்ணங்கள் வெற்றிடமாக்கி..
நாளையுனது அறிமுகத்தில்
அங்குலம் அங்குலமாய் பெருகிவிடும்
ஆச்சர்யத்தில் ஜீவிக்கிறது கடல்.

இன்னமும் நான்
கலைகளின் அமிலத்துள்
கரைகின்ற ஓவியனாய்...



நன்றி   :  நிலாச்சாரல் இணைய இதழ்

காற்றில் உலவும் கவிதை


நிரந்தரத்தின் இழப்பு 


இது நாள் வரையிலான
சிரமங்களின்
இறுதி மதிப்பீடு
இனியும் வெளிவராவண்ணம்
இருப்பில் முடக்கியதொரு நெஞ்சம்
எதிர் வரும் தருணத்து
இக்கட்டான கதிர் வீச்சின்
அழைப்பு மணியோசை கேட்க
துயரத்தின் சாவியிட்டு
இலகுவான நிரந்தரங்களை
இழக்க காத்துக்கிடக்கிறது.
கண்ணீரின் அங்கீகாரம்
கவனிக்கப்படாமல்
முடங்கியே கிடக்கிறது.
தளர்ந்து போன மனதில்
முனகல் சத்தம் மிச்சமிருக்கக்கூடும்.



 

 

பிரியங்களின் பிரசவம் 

 

பரந்த காற்று வெளியின்
அடித்தளத்து நுண்படலம்
சமவெளியின் அந்தரங்கத்தை
மறைத்து போர்த்தி பரவியிருக்கும்

நிலமங்கை பேரழகின்
மேல்தளத்து மென்படலம்
மன்மத பொக்கிஷத்தில்
அவிழாது மயக்கம் பிரதிபலிக்கும்

இதற்கிடையே-
எதிர்பாரா நொடிப்பொழுதில்
ஊடலின் விழுது பற்றி தாவி
மௌனம் கலைத்து
தளிர்த்து விடுகிறது
பிரியத்தின் மனமொத்த விதையொன்று...


நன்றி   :  கீற்று இணைய இதழ்






தவிப்பு


நிச்சயம் மழை வரும்
களிப்பில் ஆடும் மயில்
நனைந்தபின் தவிப்பில்!


சுடும் வெயில்


நீரில்லா ஆற்று படுகை
நெடுநேரம் உறங்கியே கழிக்கும்
மதிய வெயில்



சிதறல்


உடைந்த கல் மூக்குத்தி
சிதறல்கள் அனைத்திலும்
பதிந்ததவள் முகங்கள்


காத்திரு


காத்திருக்கும் வண்ணத்துப்பூச்சி
வழிநெடுக பூஞ்செடிகள்
கருத்துப்போகிற மேகம்


நன்றி   : கூடல் இணைய இதழ் 





உறுதியாய் இரு...

ஞானப் புதையலின்
இருப்பிடம் தேடி
நாமெட்டும் முதல் சந்து
தேடல்

தேடுதல் பயணத்தின்
ஆர்வம் அடிக்கல்
இலட்சியம் மைல்கல்
ஒழுக்கம் திசை காட்டி

செய்கையின் நடை பாதையில்
பிழை யெனும் புதை குழி
தென்படலாகும்
பிழைசெய்தல் பிழை யில்லை
மரத்தில் துளையிடல்
பறவையின் வாழ்வு தர்மம்
துளைகளுள்ள மூங்கிலும்
மரங்களில் துளைகளும்
நிர்பந்தங்கள்

யதார்த்தத்தின் படித்துறையில்
தவறுகளின் பாசி படிமம்
நிதர்சனம்

தடங்களை விஞ்சு
நேரத்தை மிஞ்சு
நேர்மைக்கு அஞ்சு
தப்பெனில் கெஞ்சு
கடமைகள் கொஞ்சு
'பொறாமை' கழுகின் குஞ்சு
இழந்ததெல்லாம் நஞ்சு
இனி யெல்லாமுனக்கு பஞ்சு

விமர்சனங்கள்- வினா
விருப்போடு விடையளி
வெற்றி தேடு !
உண்மையாய் உள்ளவரை
உறுதியாய் இரு...


வள்ளுவனின் எழுத்தாணி
உள்ளங்கை வருத்தி
உருவானது
வள்ளுவர் சிலை

மயில், கணபதி, நந்தி, துர்க்கை
முடித்த கைக்கு பரிசு
இப்பணி

உளியும் சுத்தியலும்
ஓயாது உழைத்திருக்கும்
திருப்தியில் பாறாங்கல்
சிறந்த மொழியாக்கம்

வெயிலின் உக்கிரம் ஓங்க
சில வேளை
வியர்வை உறிஞ்சிய சிலை

முடிவுக்குவரும் மொழியாக்கம்
பொருட்பவின் வள்ளுவன் தயார்
எழுத்தாணியின்றி

வெடித்தது யோசனை
உளிஎடுத்த சபதி
சிலையின் உள்ளங்கை திணித்தார்

வீதி நடுவே மேடை நின்று
ஈரடி செய்யுள் எழுதும்
இனி இச்சிலை
சுத்தியலின் இயற்பால் தொடங்கி. 


பணிதல்

அகல் விளக்கின்
சுடர் மொட்டுகள்
கசிந்த வெப்பத்தில்
காற்று வெளியின்
கன்னம்
சூடேறி போகிறது.
கோபத்தில் வளி
தீபத்தை
அணைக்க முயல்கையில்
உள்ளங்கை கூப்பி
மன்னிப்பு கேட்டு
தாழ்பணியும்
இளஞ் சுடர்
பணிதலின் வியாக்ஞானம்
பளிச்சென
சொல்லி போகிறது ! 


நன்றி   :  வார்ப்பு இணைய இதழ் 




இழப்பாறு

சனிக்கிழமை சாயங்காலம்
துக்கம் அனுஷ்ட்டிக்கப்பட வேண்டிய
மாலைநேர நெரிசலின்
கைக்கெட்டிய வாரச்சம்பளத்துள்
மிச்சமிருந்து போகிறது
ஐம்பதின் மடங்கில் இழப்பும்
நூறின் மடங்கில் வருத்தமும் ...

எதிரெதிரே அமர்ந்து
நானும், நடமும்
தாயக் கட்டை ஆடுகிறோம்
நடத்தின் கையகன்று
விழுவதெல்லாம் 'ஆறுத்தாயம்'
விருத்தங்களின் கேளிக்கைகள்
'பழம்' பாட வாய்ப்பின்றி
பரிதவிப்பில் தொடர்கின்றன
சதுரங்க மும்முரமும்
பிறிதொரு தாயங்களை எதிர்நோக்கி ...

வாழ்வு சூழ்ந்து இழப்பு
இழப்பு சார்ந்து வாழ்க்கை

அன்றாட நிகழ்வுகளின்
அலுவல் வரவேற்பறைகளில்
வழுவிழந்த மதில் முழுதுமென
இயலாமை ஆணி அறைபட்டு
இழப்பின் புகைப்படங்கள்
உடன்பாடு விலகி கோர்க்கப்படும்
அதன் பரிமாணங்கள்
அணுவணுவாய் தகர்க்க படுமெனும்
அபரிமித நம்பிக்கையை தொடர்ந்து...

இழப்பின் உள்ளங் கைகளில்
எனைக் கொடுத்துவிட்டு
நகர்கிறேன்
நான் நீரென்று தெரியாமல் போகுமான
தருணங்களில் ...

பிறழ்கிற புதிர் வாழ்வின்
நடம் தற்காலிக சரிவு
நிரந்தரத்தின் சமாதியல்ல ...
 

பந்தய வாழ்வு
 போட்டியை 
நிறைவு செய்தல் 
பங்கெடுப்போரின் 
முயற்சி 

நிறைவு செய்தலைப் 
போட்டி யாக்குதல் 
பரிசு வெல்வதன் 
சூழ்ச்சி 

பரிசுகளற்ற போட்டியின் 
பந்தயக் குதிரையாய்
ஓட்ட முனைப்பில் 
இன்னமும் நீள்கிறது 
வாழ்வின் நீட்சி!
 
 நன்றி   :  உயிரோசை இணைய இதழ்

வியாழன், 10 மார்ச், 2011

இளங்கோவின் விரல்களில் முளைத்த தமிழ் கவிதை வேர்கள்


தோல்விக்கான அடையாளம்


 
அழைக்கிறபோதேல்லாம்
உன் பலத்தின் வசப்படுதல்
எனக்கினி சாத்தியமில்லை.

வளியின் சுழற்சியில்
இறுபட்ட சருகென விரைகிறது
குறுமிளகு ஆயுள்.

இரட்டை தாவணியை
உயர்த்திப் பிடித்து
ஏகாந்த வெளியின்
இரம்யத்துள் சிறகடித்தல்
இன்றைய தினத்தில் பதிவான இச்சை.

எனைத்தேடி அலையாதே !
செம்பருத்தி இதழ் மறைவில்
நெடுநேரம் கழித்த
நேற்றைய சந்திப்பு மூலதனமல்ல
அதன் தனிமான அழுத்தம்
இனி மீள்வதற்கில்லை.

என்மீதான ஆசை
உன்னுள் ஆதிக்கம் செலுத்துவதாய்
உளறிய வழக்கை
பின்னெடுத்துக்கொள்

அடர்வான ஆச்சரியத்துள்
அலைந்து அடைபடு
தசை தங்கிய தாகங்கள்
உதிர் படும் தீந்தை
புனைவில் மீட்ட சுரத்தை
ஒப்பனை செய்தல்
ஒப்புக் கொள்வதற்கில்லை.

ஊர்தலின் நிர்பந்தங்கள்
கடந்த முனைப்பில்
இருவருமே சிறகடித்தோம்
மீண்டுமொரு ஊர்தலுக்கான பயிற்சியின்
அவசர ஆளுமையில்
அவதரித்த உணர்வுகள்
அனிச்சையாய் தோற்றுபோகலாகும்.



நன்றி : கீற்று இணைய இதழ் 



நானென்ற விமர்சனம்

யாராவேன் நான்?
அறிமுகம் யாதென தெரியாதொரு
தருணங்களை முடிச்சிட்டு 
தலையிருத்தி சுமந்து
நிற்கிற மேகம் 
எதிர்படுவோரின் 
விமர்சனத்துள் முறிந்து 
சாக்கடை மழையெனப் பெய்கிறது. 

எச்சில் படும்
விமர்சனங்களின் கதிர்வீச்சில்
இதயப் பூங் கொடியின்  இலைகள்
பச்சயமற்று மடிதல்
வாடிக்கையாகிறது.

நிலையற்ற மதிப்பீடுகள்
நெஞ்சக் குடுவையின்
அமிலக்கலவையை
நிலைகுலைக்கலாகும்.
நல்லவை கெட்டவை பிரித்தலின் சாத்தியம்
இல்லாமல் போகிறது
இயல்பான வேதிய கலவையுள்.
குறைகளின் நீட்சியை
பிரதிபலிக்கும் கண்ணாடியுள்
சுயவிமர்சனம்
பாதரச பூச்சென
படிந்ததின் உண்மை
நிராகரித்து தொடர்கிறது
என் பயணம்...
திரும்பிய திசையெலாம்
மெல்ல சூழும் விமர்சனங்களின்
திராவகச் சாலைகள்!

நன்றி : கீற்று இணைய இதழ் 




சிக்கலில் சிக்கிய வினாக்கள்



மனசெனும் படகில்
வினாக்களின் பயணம்
துடுப்படிப்பாரின்றி
தளும்பி... ததும்பி..
நகர்கிறது
தொலைவில் புலப்படும்
சஞ்சல சுழலில்
சிக்கி தவித்தல்
உறுதி செய்யப்பட்ட நிமிஷங்கள்
நெஞ்சக் கரைகளில்
தொங்கும் மரங்கள்
கிளைகள் பட்டுவாடா செய்த
புயல் காற்றால்
தள்ளப்படுகிற படகு
தற்காலிகமாய்
வேற்றுப் பாதையேற்று
தொடர்கிறது..
பொருளடக்க விளக்கங்களின்
விவரணம் தேடும்
பயணத்தை
அணை சேர்ந்த தருவாய்
தவறி முறிந்த படகு
அள்ளி வீசப்பட்ட வினாக்கள்
தப்பியனவை மட்டும்
மதகு மோதி  ஒட்டிக்கொள்ளும்
மீண்டும் விடைகள் தேடி
எட்டிப்பார்த்த தருணம்
அணையில்
நீர் வரத்து அதிகரிப்பின் 
எச்சரிக்கை கொடி

நன்றி : பதிவுகள்  இணைய இதழ்



கிராமங்கள் கற்பிக்கும்


விரிந்த நெஞ்சு
துரித தேடல்
தெளிந்த பார்வை
தற்காப்பு கணிதம்
பகைவெல்லும் பயிற்சி
பொது உயிர் காப்பு
தியாக பொறுப்பு
வேண்டிய அளவைகளில்
வெற்றி கண்டு
பொறுக்கப்பட்ட பூனைகள்
வித்தை மறந்த வேளை
இல்லவேயில்லை...
வீரம் விட்டொழித்த காலம்
வேட்டையாடப்படுகிறது
தலைவர்களின் உயிரும்
ஆட்சியர் மனைவியின் கண்ணீரும்
வியூகம் அழிக்க தவறியதன்
விளக்கம் அளிக்குமுன்
நினைவிருத்திக்கொள்ளலாம்
வந்த பாதை பின்னோக்கி  போகையில்
வழி மறிக்கும் ஆலமரம்
வடக்குப்பக்கம் காணியில்
வாளெடுத்து குதிரையேறி நிற்கும்
ஊர்க்காவல் மாசனக்காளை
கற்காத ஓலை
கடமை தவறாத சிலை
மொத்த கிராமத்து மூச்சும்
மாரி கொத்தனார் வடித்த மீசையில்
காத்தலின் குறள் கேட்க
கள்புட்டி படைத்தல் போதும்
மாசனக்காளை
கிராமத்து பூனையல்ல
கரிசல் வாழ்வின் சேனை !

நன்றி : பதிவுகள்  இணைய இதழ்



பல்லுயிர் ஓம்புதல் தலை




நினைவிலில்லை
பச்சை தென்னக்கீற்றில்
கூரை வேய்ந்த நாள்
சூரனை வதம் செய்யும்
சொக்கன் கண்மாய் இறங்கிய நாள்
விடியற்காலை தொடங்கி
வான் கருக்கும் வேளைக்குள்
புதிதாய் தொப்பி அணிந்த குடிசை
கீற்றினை பகுப்பார் நைனா
பாதியில் அறுபட்ட பச்சை சருகு
பொறுத்துக்கொள்ளும் வலியில்
விரல் சூப்பிகொண்டேன் நான்
இரத்தம் கசிந்த பிரம்மை


மழை, வெயில் தாக்குதலில்
மக்கிப்போன குடிசை
துண்டு துண்டாய் சருகுகள்
கொட்டித் தீர்க்கும்

மாற்று கூரை வேயும் முடிவில் நைனா
மறுத்திருப்பேன் நான்
விளக்குதல் கடினம்
உதிர்ந்த சருகொன்றை
உள்ளங்கை வைத்தேன்
ரேகை பதிந்து ஊர்ந்திடும்
கரையான்கள் ...



kelango_rahul@yahoo.com


நன்றி : திண்ணை இணைய இதழ்


தமிழ் கவிதை தேரின் தொடர்கிற பயணம்



யாரை விடும் பசி


பறவையின் அலகில் புழு
குதூகலத்துடன் குஞ்சுகள்
கண் பார்வை தொலைவில் கழுகு!



மாற்றம்

கால் ஒடிந்த மாடு
சந்தோசத்தில் கன்று
மிஞ்சியது மடு!


அழுத கண்ணீர்


கரையோரம் கருவேலமரம்
வெட்டிச் சாய்க்கிறான்
வியர்வையில் நனையும் வேர்.




மலரும் பூங்கா

அந்தி சாயும் அழகில்
பூ பூத்து குலுங்கும்
பூங்காவின் இருக்கைகள்


அழைப்பு ஒலி

அவள் திட்டிய வார்த்தைகளை
சேமித்து வைத்திருக்கிறேன்
கைப்பேசி அழைப்பென


காதலர் தினம்

பத்திரப்படுத்தினேன்
பலூன்கள் அனைத்தும்
அவள் நிரப்பிய காற்று


காதல் இணைய(யு)ம்

பயனர் பெயர் 'நான்'
கடவுச் சொல் 'நீ'
காதலுள் 'நுழைக'!



முறிந்த கனவு


இரவில் எழுதிய கவிதை
இலக்கணப் பிழையோடு விடியும்
கனவு!

விடுபட்ட இருமுகம்

அவளின்
கால் பட்டு சிதறும்
மழை நீர் முத்துக்களில்
தொலைகிற என் முகம்
கரைந்து
நொறுங்கி
இடறி சிதறி
காணாமல் போகின்றன
தேடி பார்க்கிறேன்
பார்வை வீசி
பாதம் வரையிலும்
மழை நின்று
மிதமாய்
குளிர் வாடை காற்று
உற்சாகத்தில் என்னவள்
என்னவென்று தவிக்கிறேன்
இருவரின் முன்பு
புதிதாய்
தேங்கிய நீர் குட்டை
தெளிவாய் தெரிகிறது
தொலைந்து போன
என் முகம்
பிரகாசமாய்
தோள் சாய்ந்து
சந்தோசத்தில் அவள்
அழகாய்...
அழகழகாய்...
இரு முகம் தண்­ணீரில்!
  
நன்றி :  கூடல் இணைய இதழ்