ஞாயிறு, 20 டிசம்பர், 2020

வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2020- சிறந்த சிறார் இலக்கியம் –சூரியனை ஒளித்து வைத்த சிறுமி - கொ.மா.கோ.இளங்கோ

 



வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2020
சிறந்த சிறார் இலக்கியம் – ’சூரியனை ஒளித்து வைத்த சிறுமி’

ஆசிரியர் – கொ.மா.கோ.இளங்கோ
பதிப்பகம் – புக்ஸ் பார் சில்ரன் - பாரதி புத்தகாலயம்
மனித சமூகத்தின் பரிசுத்தமான அங்கம் என்றால் கண்டிப்பாக குழந்தைகள்தான். குழந்தைகளின் உலகம் கதைகளாலும் கனவுகளாலும் கற்பனைகளாலும் பல்வேறுவிதமான கேள்விகளாலும் ஆனது. இயல்பிலேயே கற்பனை வளம் அதிகம் கொண்ட குழந்தைகளுக்கு அவர்கள் விரும்புகிற விதத்தில் கதைகளைப் படைப்பது மிகவும் சவாலான ஒன்று. அந்த வகையில் எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ தனது கதைகளின் வழியே குழந்தைகளை ஓர் பரந்துப்பட்ட உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறார்.

இந்த உலகில் நீங்கள் ஓவியத்திலிருந்து வெளியேறி சூரியனையே ஒளித்து வைத்த சிறுமியைச் சந்திக்கலாம், விளக்கில்லாத ஆம்புலன்ஸிற்கு வழிகாட்டிய மின்மினிகளைக் கண்டு சிலிர்க்கலாம், நிலவைப் போலிருக்கும் கலாவுடன் சேர்ந்து நிலவு பார்த்து குதூகலிக்கலாம், ஆழ்கடலின் அதிசயங்களையும் பாலைவன மணற்குன்றுகளையும் கண்டு வியக்கலாம்….இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு அதிசய உலகிற்குள் நம்மைக் கூட்டிச் செல்வதோடு நமக்கான நல்லொழுக்கங்களையும் சூழலியல் சார்ந்த பொறுப்புணர்வுகளையும் இயல்பான முறையில் நமக்குக் கடத்துகிறார் ஆசிரியர். குறிப்பாக வீட்டுக்கு வருபவர்களை எவ்வாறெல்லாம் வணக்கம் சொல்லி வரவேற்க வேண்டுமென தனது அம்மாவால் செயற்கையான முறையில் பயிற்றுவிக்கப்படும் சிறுமி தனக்குப் பிடித்தமான தாய்மாமனைக் கண்டதும் அவரை எவ்வாறு வரவேற்கிறாள் என்பது உண்மையிலேயே பரவசமூட்டுகிறது. குழந்தைகளிடமிருந்து பெரியவர்களாகிய நாம் கற்றுக்கொள்வதற்குத்தான் எவ்வளவு இருக்கிறது…

இப்படி வெவ்வேறு விதங்களில் குழந்தைகளின் உலகையும் குழந்தைகளுக்கான உலகையும் சிறப்பாகப் பதிவு செய்த வகையில் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் குறிப்பாக பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ‘சிறார் கதைகள்’ இவை என #வாசகசாலை இந்நூலை அழுத்தமாகப் பரிந்துரைக்கிறது.

எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ அவர்களுக்கும் இந்நூலினை சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கும் பாரதி புத்தகாலயத்திற்கும் #வாசகசாலை யின்
வாழ்த்துகள்
. மகிழ்ச்சி!


சனி, 5 ஜனவரி, 2019

நட்சத்திரக் கண்கள் - புத்தக விமர்சனம்

 புத்தக   விமர்சனம்

நட்சத்திரக் கண்கள்
ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ
விலை: ரூ.80

புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை
சென்னை - 600 018

நிலா போன்று அழகான கதைகள்... அவற்றுடன் நட்சத்திரங்கள் போன்று ஆச்சர்யமான அறிவியல் தகவல்கள்... இதுதான், ‘நட்சத்திரக் கண்கள்’ கதைத் தொகுப்பு. மொத்தம் 14 கதைகளை அளித்துள்ளார், ஆசிரியர்     கொ.மா.கோ.இளங்கோ. சிறார்களுக்காக பல்வேறு கதைத் தொகுப்புகளை எழுதிய அனுபவம், இந்தத் தொகுப்பில் நன்கு கைகொடுத்துள்ளது. ஒவ்வொரு கதையுமே மிக எளிய நடையில், எங்கும் தடையின்றி செல்கிறது.
‘அட’ எனப் புன்னகைக்கச் செய்யும்  புதுமையை ஒவ்வொரு கதைகளுக்குள் கொண்டுவந்திருப்பது சிறப்பு. உதாரணமாக... ‘நீ என்ன ஆகப்போறே?’ கதையில் வரும் மீனா என்ற சிறுமி, எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறாள். எழுத்துகள் பற்றி அவள் சொல்லும் விஷயம், அவ்வளவு அழகு.
ஒவ்வொரு கதைக்குப் பிறகும் இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள், நம்மைச் சுற்றியிருக்கும் பிற உயிரினங்கள், சுற்றுச்சூழல் மீதான அக்கறையை உணர்த்துகிறது. ஓவியங்கள் ஒவ்வொன்றும் தொகுப்புக்கு அழகு சேர்க்கிறது. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், இயற்கையையும் உயிரினங்களையும் இன்னும் அதிகமாக நேசிப்போம் என்பதில் சந்தேகமில்லை


கதை மந்திரம் கற்றுத்தரும் கதாசிரியர் கொ.மா.கோ.இளங்கோ



சமகால குழந்தை இலக்கியத்தில் புதிய தடங்களைத் தன்னுடைய படைப்புகளில் படைத்து வருபவர் கொ.மா.கோ.இளங்கோ. யதார்த்தத்தில் அதிபுனைவை மிகக்கச்சிதமாக கலந்து, அவர் எழுதிய மந்திரக் கைக்குட்டை’, அறிவியல் புனைவு சிறார் நாவல்ஜிமாவின் கைபேசி’, சொந்த வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு எழுதிய வாழ்வியல் சித்திரமான சஞ்சீவி மாமாஎன எல்லாவற்றிலும் புதிய பாதைகளைப் போடுகிறவர் கொ.மா.கோ.இளங்கோ.

குழந்தை இலக்கிய மொழிபெயர்ப்புப் படைப்புகளிலும் அவருடைய தேர்வு குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற மொழிநடையும், கதை சொல்லும் பாணியும், அவரை குழந்தை இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமானவராக மிளிரச்செய்கிறது. குழந்தை இலக்கியத்தில் எல்லாவிதமான சோதனை முயற்சிகளையும் செய்து புதிய, புதிய படைப்புகளை உருவாக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். சமகால குழந்தைகளின் மனநிலையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுத வேண்டிய கட்டாயம். இன்னமும் காலத்துக்கு பொருந்தாத முனிவர், சாபம், வரம், என்று பொருட்களை வைத்து எழுதத் தேவையில்லாத காலம்.

குழந்தைகளிடம், அறிவியல் பார்வையையும் கற்பனை வளத்தையும் மானுட அறத்தையும் வளர்க்கிற படைப்புகளை உருவாக்க வேண்டிய காலம். அப்படியான பல குறிப்பிடத்தக்க படைப்புகளை உருவாக்கியிருக்கிறார் கொ.மா.கோ.இளங்கோ. அதனாலேயே கொ.மா.கோ.இளங்கோ, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளின் முன்வரிசையில் இருக்கிறார்.

-      உதயசங்கர்

நட்சத்திரக் கண்கள்’

நட்சத்திரக் கண்கள் - அற்புதங்கள் நிகழ்த்தும் சிறார் கதைகள் 


ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ
விலை: ரூ.80
புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை
சென்னை - 600 018





கதைகள் என்ன செய்யும்? குழந்தையின் அழுகையை நிறுத்தும். அம்மாவைப் போல ஆறுதல் சொல்லும்.  கடல் அலைகளைப் படகாக்கி, கற்பனை உலகுக்குக் கூட்டிச்செல்லும். கண்ணுக்கு எதிரில் பேரதிசயங்கள் நிகழ்த்தும்.
               நட்சத்திரக் கண்கள்புத்தகத்தில், உங்களோடு பழகக் காத்திருக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
கோதையைத் தெரியுமா? அவர்களது வீட்டிலுள்ள கோழிகதை முட்டைகள்இடும் என்பதை நம்ப முடிகிறாதா? நந்தனின் கண்களில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்தீர்களா? அவன் தொலைத்த நட்சத்திரங்களைத் தேடித்தந்தது  யார் தெரியுமா?
பாருங்களேன்! சுனிதா வீட்டுத் தோட்டத்திலுள்ள மரத்துக்கு தாடி முளைத்திருக்கிறதாம். அம்பிகாவின் தம்பி வளர்க்கும் அணிலுக்காக, செவ்வாய் கிரகத்தில் கொய்யா மரத்தை வளர்க்கப் போகிறாளாம் பொம்மி.
வாருங்கள் குழந்தைகளே! இந்த புத்தகத்திலிருக்கும் அதிசயக் குடை ராட்டினத்தில் ஏறிக்கொள்ளுங்கள். அற்புதங்கள் நிகழ்த்தும் சிறார் கதைகள் நிறைந்த உலகைச் சுற்றி வலம் வருவோம்.

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

"சிறுவயதுமுதலே வாசிப்புப் பாசக்கம் கொண்டவர்கள்தான் வளர்ந்த பிறகு எழுத்தாளராகவும் சிந்தனையாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் ஆகிறார்கள். மிகுதியாக்கஸ் சிறுவர் இலக்கியம் படைக்கும் சமூகம்தான் குழந்தைகள் மீதும் அவர்களின் குண உருவாக்கத்தின் மீதும் அக்கறைகொண்ட சமூகமாக இருக்க முடியும்."



குழந்தை எழுத்தாளர் : கொ.மா.கோ.இளங்கோ 




வெள்ளி, 6 மே, 2016

மரம் கொண்டாடிய பிறந்த நாள்

 கொ.மா.கோ.இளங்கோ








காட்டில் ஒரு பெரிய, வயதான மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு பொந்து இருந்தது. ரொம்ப நாட்களாக அதில் முயலம்மாவும் அதன் குட்டி ரேபியும் வசித்து வந்தன. முயலம்மாவுக்கு ரேபி என்றால் உயிரு. அது இரைதேடப் போகும்போதெல்லாம் குட்டியைத் தன்னந்தனியாக வீட்டில் விட்டுச்செல்லும். 

ஒவ்வொரு தடவையும் வெளியே போய்விட்டுத் திரும்பி வரும்வரை வீட்டுவாசலில் மணலையும் இலைகளையும் பரப்பி துளை வாயிலை அடைத்து வைக்கும். 

அன்று ஒரு நாள். 

ரேபிகுட்டி வீட்டில் தனியாக இருந்தது. அப்போது ஒன்று அழைப்புக்குரல் கேட்டது. 

“ரேபி! ரேபி! வெளியே வர்றியா. நாம விளையாடுவோம்” 

முயல் குட்டி வீட்டைத் தாண்டி வரவில்லை. 

“ஊஹூம்! நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. நான் வீட்டைவிட்டு வெளிய வந்தது அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க” என்று பொந்துக்குள்ளிருந்து பதில் சொன்னது குட்டிமுயல். 

“நான் யாருன்னு ஒனக்குத் தெரியுமா? உங்க வீட்டுக்கு மேலே வளர்ந்திருக்கிற மரம் பேசுறேன். இன்னக்கி எனக்குப் பொறந்தநாள். அணில், ஓணான், பல்லி, கிளி, குருவி, மரங்கொத்தின்னு பல சிறு விலங்குகள் வந்திருக்காங்க. நீயும் கொஞ்சநேரம் இங்கே வரலாம்ல”. 

பிறந்த நாள் கொண்டாட்டம் என்றதும் ரேபிக்கு ஆர்வம் கூடியது. பேசும் மரத்தையும், மற்ற விலங்குகளையும் பார்க்க ஆசைப்பட்டது. 

சற்று நேரத்தில் வீட்டுக்கு முன்பு இருந்த மணலையும் இலைகளையும் யாரோ அகற்றினார்கள். முயல் வீட்டில் வெளிச்சம் பரவியது. ரேபி, அங்கிருந்து தாவி புல்வெளிக்கு வந்தது. 

ஆமாம்! முயல்குட்டியை வீட்டுக்கு வெளியே கொண்டுவந்தது யார்? நாலாபக்கமும் கண்களை அலையவிட்டுத் தேடிப்பார்த்த குட்டிமுயலுக்கு முன்னால் ஒரு ஓணான் வந்து நின்றது. 

“பயப்படாதே! நான்தான் உங்க வீட்டு வாசலைத் திறக்கச்சொல்லி ஓணானிடம் சொன்னேன்” என்று பேசியபடி வயதான மரம் தனது நீளமான கிளை ஒன்றை வளைத்துக் கீழே இறக்கியது. அங்கு நடக்கிற விநோதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டது குட்டி முயல். 

“உன்னை என்னோட தோள் மீது ஏற்றி வெச்சுக்க ஆசை” என்று மரம் பேசியதைக் கேட்ட முயலுக்கு ஒரு சந்தேகம். 

“ஐயோ! எனக்கு மரமேறத் தெரியாதே” என்றது குட்டி முயல்.
உடனே அந்த மரம் தனது நீளமான கிளையை வளைத்து நிலத்தைத் தொட்டது. உட்கார வசதியாக, தன் நுனிக்கிளையில் ரேபியை ஏற்றிக்கொண்டது. பிறகு, அந்தக் கிளை மெல்ல மெல்ல மேலே எழுந்துசென்றது. முயல் குட்டியை உச்சிக்குக் கூட்டிட்டுப் போனது. 

ரேபி குட்டி, மரத்தில் உட்கார்ந்தபடி அழகான காட்டைப் பார்த்து ரசித்தது. 

“எனக்கிப்போ நாற்பத்தி இரண்டு வயசு. ஒன்னோட தாத்தா பாட்டிகளுக்குக்கூட என்னைத் தெரியும்” என்ற வயதான மரம், மற்ற சிறு விலங்குகளை முயலுக்கு அருகில் அழைத்தது. அவையெல்லாமே பெரிய கிளைக்கு அருகில் ஒன்று கூடின. காட்டின் கதைகளைக் குட்டிமுயலுக்குச் சொல்லிக்கொடுத்தன. காடு பற்றிய விவரங்களையும் விலங்குகள் பற்றியும் தெரிந்துகொண்ட ரேபி நன்றி சொன்னது. 

கதை கேட்கிற ஆர்வத்தில் மரத்தின் பிறந்தநாள் பற்றி மறந்துபோனது குட்டிமுயல். 

“ஐயோ! என்ன மன்னிச்சிடு. பிறந்தநாளுக்குப் பரிசாத் தர எங்கிட்ட எதுவுமே இல்லையே. அம்மா தந்த காரட் துண்டைக்கூட ஒத்தையில சாப்பிட்டுட்டேனே” 

“உன்னைப் போல சின்னக் குழந்தைகளோட பேச்சே இந்த உலகத்துக்கும் எனக்கும் கிடைச்ச பெரிய பரிசு. அதில்லாம வாழ்நாள் முழுக்க தங்கிட்ட இருக்கிறதை மத்தவங்களுக்குப் பரிசாகத் தருவது மரங்களோட வழக்கம்” என்ற மரம் சற்று யோசித்துச் சொன்னது: 

“ஆனாலும் நானிப்போ ஒனக்காக ஒரு கிப்ட் தரப்போறேன்” என்ற மரம் கம்பீரமான குரலில் அணிலை அழைத்துச் சொன்னது. 

“அணிலே! அணிலே! எல்லாக் கிளைகளிலும் ஏறிச்சென்று ஒரு பெரிய இலையைப் பறித்து வா” என்றதும் பாய்ந்தோடியது அணில். அகலமான இலையுடன் திரும்பிய அணில், மரம் சொல்லச் சொல்ல, இலையைக் கூம்பாக மடித்துக் குட்டி முயலின் தலையில் கவிழ்த்து. அங்கிருந்த பிற விலங்குகள் ரேபியைப் பாராட்டி மகிழ்ந்தன. 

“அய், இந்த இலைக் கிரீடம் உனக்கு அழகா இருக்குது. இந்தக் காட்டுக்கு இனி உன்னையே இளவரசனாக நியமிச்சுடலாம்” என்ற ஒரு பச்சைக்கிளி சொன்னது. 

நேரமாக முயல்குட்டிக்குப் பசியெடுத்தது. தனது குடும்ப உறுப்பினர்களில் ஒன்றான மரங்கொத்திக்கு அகத்திக் கீரைச் செடியிலிருந்து இலைகளைப் பறித்துத் தரச்சொல்லி மரம் வேண்டுகோள் வைத்தது. மரங்கொத்தியும் அப்படியே செய்தது. 

சாப்பாட்டை முடித்ததும் ரேபிக்கு விளையாட ஆசை வந்தது. இதை மரத்திடம் சொன்னது. அதைக் கேட்ட அணில், நாகலிங்க மரத்தின் காயைப் பறித்துத் தந்தது. உச்சியில் உட்கார்ந்திருந்த குட்டி முயல் அதை உதைத்து விளையாடியது. காய் கீழே உருண்டு நிலத்தில் விழுந்தது. 

இப்படி மரத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் சாயங்காலம் வரை தொடர்ந்தது. புதிய நண்பர்களுடன் சேர்ந்து பல விளையாட்டுகளை ஆடி முடித்த ரேபிக்கு வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 

“நான் வீட்டுக்குப் போணும். என்னை வீட்டு வாசலில் இறக்கி விடுங்க” என மரத்திடம் உதவி கேட்டது குட்டி முயல். 

வணக்கம் சொல்லி வாழ்த்திய வயதான மரம், குட்டி முயலை நிலத்தில் இறக்கிவிட்டது. மற்ற சிறு விலங்குகள் எல்லாம் இறங்கி வந்து நன்றி சொல்லிவிட்டுச் சென்றன. அப்போது அங்கு வந்த முயலம்மா, இலைக் கீரிடம் அணிந்திருந்த ரேபியைப் பார்த்து வியந்துபோனது. 

“யார் உனக்கு இலைக் கீரிடம் சூட்டியது” என கேட்டது முயலம்மா. நடந்ததை சொன்னதும், மரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கைக்குலுக்கியது முயலம்மா. 

என்ன குழந்தைகளே! நீங்களும் மரத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வருகிறீர்களா?

 

மார்ச் 9 , 2016 தமிழ் இந்து


தியாவின் மந்திரக் கைக்குட்டை



தியாவுக்கு சின்ன வயசுலயிருந்தே பறவைகள்ன்னா ரொம்பப் பிடிக்கும். குட்டிகுட்டிப் பறவைங்க கொஞ்சிக்கொஞ்சி கூவுகிற குரல் கேட்டால் அவளோட மனசு றெக்கைகட்டிப் பறக்கக் கிளம்பிடும். அவளோட வீட்டு வாசல் முன்னாடி கூரையில் நிறைய மரக்கூடுகள் செஞ்சு தொங்க விட்டுருக்காங்க. கரிச்சான் குருவி, தவிட்டுக் குருவி, வண்ணாத்திக் குருவி, கதிர்க் குருவின்னு வேறவேறவகை குருவிங்க அந்தக் கூடுகள தேடிவந்து தங்கிவிட்டுப் போகும். 

அன்னைக்கு ஒரு நாள் தியாவுக்கு ஒரு ஆசை வந்துச்சு. அவளோட அப்பா முன்னாடி போய் நின்னா. “அப்பாப்பா! எனக்கு வண்ணத்துப் பூச்சிகள வளர்க்க விருப்பமா இருக்குதுப்பா. வாங்கித் தாறீங்களா”ன்னு வாய் திறந்து கேட்டா. அவரு பதில் சொல்லத் தெரியாம தெகச்சுப் போயிட்டார். வண்ணத்துப்பூச்சி வளர்ச்சியோட பரிணாமம் தெரியாம அத வளர்க்க விரும்புறாள்னு நெனச்சார் தியாவோட அப்பா. 

“வண்ணத்துப் பூச்சி முட்டைகள விலைக்கு வாங்கலாம். ஆனா, அதுக்கு முன்னால நம்மகிட்ட பூந்தேன் செடிகள் தோட்டம் வேணுமே. நகரச் சூழல்ல தோட்டம் அமைக்கிறது ரொம்பக் கஷ்டம்”ன்னு சமாதானம் செய்ய முயற்சித்தார். 

அவளுக்கு, கண்ணு ரெண்டும் பொங்கி அழுகை வந்துச்சு. அழுதுகிட்டே அம்மா மடியில போய் சாய்ந்து உட்கார்ந்தாள். 

“சாரிடா தியா! நாளைக்கே நாம நர்ச்சரிக்குப்போயி பூந்தேன் செடிங்களை வாங்கிட்டுவரலாம். அதுகள தொட்டியில வளர்க்கலாம். செடிங்க பூ பூத்ததும் வண்ணத்துப் பூச்சிகள் பூக்களைத் தேடி பறந்து வந்துடும். இப்போ ஒரு வாய் சாப்பிட்டு படுன்னு” சொல்லி தியாவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டாங்க. 

அவ அழுதுகிட்டே இருந்ததால ஒரு கைக்குட்டைய வெச்சுக் கன்னத்தில வழிஞ்ச கண்ணீரத் தொடச்சிவிட்டாங்க. பிறகு அவளத் தூங்க வெச்சாங்க. அந்தக் கைக்குட்டையை கட்டில்ல வைச்சுட்டு போய்ட்டாங்க. தியா, கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்தினா. கண்கள கசக்கிவிட்டுத் தூங்கிட்டா.

நடு ராத்திரி இருக்கும். நல்ல தூக்க நேரத்துல தியாவோட கன்னத்த யாரோ தொட்டுத் தொட்டு பார்த்தாங்க. ‘டக்’குன்னு தியா முழிச்சுப் பார்த்தாள். கண்ணுக்கு முன்னாடி ஒரு அதிசயம். உடம்பு சிலிர்த்துப் போச்சு. அவளோட ரெண்டு உள்ளங்கையையும் விரிச்சு வெச்ச மாதிரி ஒரு வண்ணத்துப்பூச்சி கன்னத்தில உட்கார்ந்திருந்திச்சு. 

“என்னோட படுக்கை அறைக்குள்ள நீ எப்படி வந்தே?” ன்னு கேள்வி கேட்குறதுக்குள்ள, “வா…வெளிய போகலாம்”ன்னு வெளையாட கூட்டுச்சு. ஆனா, தியா வெளையாட்டுச் சாமான்கள் நெறச்சு வெச்சிருந்த அறைக்கு கூட்டிட்டுப் போனா. மறுநாள் விடிகாலை வரையில் ரெண்டு பேரும் ஜாலியா வெளையாண்டாங்க. 

வண்ணத்துப் பூச்சி தன்னோட கதையெல்லாம் சொல்லிச்சு. பொழுது விடிய கொஞ்ச நேரம் இருக்குறப்போ றெக்கை இரண்டையும் மடிச்சு வச்சு வணக்கம் சொல்லிட்டு பறந்துபோச்சு. ‘பூந்தேன் செடிகள் மொளச்சி வந்ததும் வர்றேன்னு’ சொல்லிட்டுப் போச்சு. 

அடுத்த நாள், தியாவுக்கு சளி புடிச்சிருந்திச்சு. முதல்நாள் சாயங்காலம் தேம்பித் தேம்பி அழுதாளே. அதுதான் காரணம். மூக்கு தொடைக்க அவ கையில வேற ஒரு கைக்குட்டைய அவங்க அம்மா கொடுத்து வெச்சாங்க. அந்த கைக்குட்டைய தன்னோட நெஞ்சுக்கு மேல போட்டு தியா தூங்கிட்டா. அன்னைக்கு ராத்திரி, ஒரு கோழிக்குஞ்சு அவ நெஞ்சுல ஏறி வெளையாடிட்டுப் போச்சு. 

இன்னொரு நாள், இருட்டுன பிறகு தியா முன்னாடி பச்சைக் கிளி ஒண்ணு உசுரோட வந்துச்சு. தியாவோட பாட்டி, அவளுக்கு சொல்லிக்கொடுத்த ‘சிகப்பு மூக்கழகி' கதைய மறக்காம அந்தக் கிளி அவகிட்ட ஒப்பிச்சிச்சு. 

கிளிக்கு எப்படி அந்தக் கதை தெரிஞ்சதுன்னு அவளுக்கு சந்தேகம்.. விதவிதமான பறவைக எங்கிருந்து வந்துச்சுன்னு யோசிக்க ஆரம்பிச்சா. மூளையைக் கிளறிப் பார்த்ததுதான் மிச்சம். விடை கிடைக்கலே. 

தியா, தன்னந்தனியா திண்ணையில சோர்ந்து போய் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சா. பால்கனியில துணி காயப்போடுற கொடி கட்டி இருந்தாங்க. அதுல அவளோட கைக்குட்டைகள் வெயில்ல காய்ந்து தொங்கிக் கிட்டு இருந்துச்சி. 

ஒண்ணு…ரெண்டு..மூணுன்னு எண்ணிப் பார்த்தாள். மொத்தம் ஆறு கைக்குட்டைகள். ஒவ்வொரு ராத்திரியும் ரகசியமா வெளையாட வந்த பறவைக எத்தனைன்னு கணக்கு பார்த்தாள். ரெண்டும் சமமா இருந்துச்சு. 

தியா மனசுல பக்குன்னு நெருப்பு பத்தின மாதிரி ஒரு க்ளூ கிடைச்சுச்சு. ஓடிப்போய் கொடியில காயப்போட்ட கைக்குட்டைகள கூர்ந்து கவனிச்சா.
கலர் கலரா கைக்குட்டைகள்ல, அம்மா தச்சுத் தந்த எம்பிராய்டிங் பறவைங்க தொலையாம பத்திரமா இருந்துச்சு. ராத்திரி நேரம் உயிரோட வந்த பறவைகள் மறுநாள் காலையில மறஞ்சு போன உண்மை அவளுக்கு ஓரளவு புரிய ஆரம்பிச்சது. 

அதென்ன? மாயாஜால வித்தைக்காரர் மட்டும்தான் கைக்குட்டைகளக் கசக்கி உள்ளங்கைக்குள்ள மறச்சு வச்சிட்டு புறா, கிளின்னு வரவெச்சு காண்பிப்பாரா? 

அதையெல்லாம் நாம அதிசயமாகப் பார்த்து மலைச்சுப் போறோம். வினோத வித்தைன்னு நம்புறோம். அதே மாதிரி, தியாவோட கைக்குட்டைகளுக்கும் மந்திர சக்தி உண்டுன்னு நம்பணும்.