வியாழன், 13 ஜூன், 2013

குங்குமம் - கவிதைக்காரர்கள் வீதியில் எனது கவிதைகள்

 
குங்குமம் - கவிதைக்காரர்கள் வீதியில் எனது கவிதைகள்


சினேகம்
ஒரு சரிவு தந்த
சினேகத்தைத் துண்டித்து
விடைபெற
வெகுநேரம் எடுத்துக் கொண்டது      
சற்று முன் பழக்கமான  
இலையை விட்டுப் பிரியும்
கடைசி மழைத் துளி!

கோயிலுக்குப் போய் ...
கும்பிட்டுத் திரும்புகையில்
கடவுள்க்கு  முன்
அஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழ
ஒரு தடவைதான்
குழந்தைக்குச் சொன்னோம்
ஒன்பது தடவை குழந்தையை
நமஸ்கரித்து எழுந்தார்
கடவுள்

விடியல்
பச்சைப்புல் அடைகாக்கும்
பனிமுட்டை உடைந்ததும்
பிறந்தது பகல்

மெளன அஞ்சலி
அடையாளம் தெரியாதவர்
ஆதரவற்ற பெரியவர்
யார் இறந்தாலும்
முதலில் கூடி மொய்க்கின்றன
மெளன அஞ்சலிக்கு வரும் ஈக்கள்

குரோடன்ஸ் குடி
மதுப்புட்டியில் வேர்விட்ட கொடி
வளைந்து நெளிந்து வளர்கிறது
குடி போதை  குரோடன்ஸ்
 
இருள் மழை
எரியும் விளக்குடன் விளையாடி
ஏமாறும் ஈசல்களின்
இறகுகள் உதிர்வதில்லை
இருள் மழையில் 

கிரகம்
எழுதி வைத்த கிரகத்தை
அதன் ஓடுபாதையில்
சுழற்றி விட
உதவும் கிரகம் எதுவென
உட்கார்ந்திருக்கும் கிரகங்களில்
ஒன்றைத் தேடிச் சுழற்கிறாள்
வெள்ளிக்கிழை தோறும்
பிள்ளையார் கோயிலில் அக்கா!
                                                                                                                                
-கொ.மா.கோ.இளங்கோ
       

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

ஆனந்த விகடனில் கவிதை -- அலையாடும் பிரார்த்தனைகள்




அலையாடும் பிரார்த்தனைகள்

இராமேஸ்வரத்துக்கும்
கச்சத்தீவுக்கும் நடுவில்
வேலப்பன் கைதான செய்தியுடன்
பேரலை ஒன்று கரை மோதியது 
கொந்தளித்த குப்பம்
மந்திரி வந்துபோகும் சாலையை
வழிமறித்துப் போட்டதும்
வக்கனையில் இரைந்தது வங்கக்கடல்
துக்கத்தில் கதறியழும்
வேலம்மாளின் கண்ணீரை
தூண்டிலிடத் தொடங்கின
தரையிறங்கிய கேமிராக்கள்
அயல்தேசக் கடற்காவல்
அப்பாவை அள்ளிக்கொண்டு போனதை
அனுசாயா அக்கா சொல்லிச்செல்ல
பாண்டியாடும் நீலவேணியுள்
பிரவேசித்து அழுகை
கண்கள் கசித்த கண்ணீரில்
கரைந்தது கடற்கரை
அக்கடற்குப்பத்தில்
நங்கூரமிட்டிருந்த ஐயமும், அதிர்ப்தியும்
அக்கரை தேசத்தின்
அதிபரையோ அல்லது அமைச்சரையோ
தவிக்கவிட்ட தகவலில்லை 
உள்ளூர்காரனின் உறுத்தல் கூட
ஒருசில வினாடியுள் உறைந்து போயிருக்கலாம்
"சுறாவுக்கு எரச்சியாயிருந்தா
 எஞ்சீவன் கெடந்து  துடிச்சிருக்காது
சூழ்ச்சிக்காரன் வலையில
சிக்கியா தவிக்கணும் பாவி"
வேலம்மாள் வீசிய வாய்ச்சொல்
ஆடாமல் அசையாமல்
நிறுத்திவைத்தது  அலைகளை
அவ்வொரு கணம்
வீசிய காற்றின் வேகத்திற்கு
ஈடுகொடுக்க முடியாத மாதாகோயில் மணி
டணீர்,டணீரென ஒலிக்கத்துவங்கியதும்
" இம் மணியோசை
கடல் கடந்து தவமிருக்கும்
கெளதம புத்தரின் காதுகளை
துளைக்கச்சொல்லி பிரார்த்திப்போம்
வேலப்பனின் விடுதலை வேண்டி
தமிழகத்தின் நம்பிக்கையை சமர்ப்பிப்போம்"
என முடித்துக் கொண்டார்
கேமிராமேன் வெற்றியுடன் உடனிருந்த
ஹாட் நியூஸ் செய்தியாளர்.

-கொ.மா.கோ.இளங்கோ

சனி, 25 ஆகஸ்ட், 2012


சாகித்திய அகாதெமி விருது - கொ. மா. கோதண்டம்

குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம்

 குறிஞ்சி செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான (2012 ) 'சாகித்ய அகடமியின்' பாலசாகித்ய புரஷ்கார் விருது கிடைத்துள்ளது. இன்று இந்த அறிவிப்பை கிடைக்கப்பெற்றோம்.
எனது தந்தையார் எழுதிய ' காட்டுக்குள்ளே இசைவிழா' எனும் சிறுவர் படைப்புக்கான விருதாகும்.
அறிந்தவர்கள் தொடர்புகொள்ள கொ.மா.கோ அவர்களின் அலைபேசி : 9944415322




நிவேதிதா புத்தகப்பூங்கா வெளியிட்ட ’காட்டுக்குள்ளே இசைவிழா’ சிறுவர் நூலுக்கு இந்த வருட சாகித்திய அகாதெமி விருதை குறிஞ்சிச் செல்வர் கொ. மா. கோதண்டம் பெறுகிறார்.
நன்றி சாகித்திய அகாதெமி.
குறிஞ்சிச் செல்வர் கொ. மா. கோதண்டம் அவர்கள், 15. 9. 1938 இல் கொட்டுமுக்கல மாடசாமி ராஜாவுக்கும், சீதாலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். மனைவி ராஜேஸ்வரிகோதண்டம் எம்.ஏ. ஹிந்தி படித்தவர். 15 நூல்கள் எழுதியவர். இரு மகன்கள், குறளமுதன், இளங்கோ .

நாவல், சிறுகதை, நாடகம், உரை, ஆய்வு, தொகுப்பு முதலிய துறைகளில் 100 நூல்களுக்கு மேல் வெளிவந்துள்ளன. பதிப்பகங்களில் 15 நூல்கள் வெளி வர உள்ளன.

முதல்நூல் 'ஆரண்ய காண்டம்' குடியரசு தலைவர் விருது பெற்றது. பல பரிசுகள் விருதுகள் பெற்றுள்ளார்.

2007 ல் மலேசிய சர்வதேச தொலைநிலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது.

சிவசைலம் முதல் ஏற்காடு கொடைக்கானல் மலைகளில், அடர்வனங்களில், மலைமக்கள் குடிசைகளில், அவர்களுடன் குகைகளில், ஆற்றங்கரைகளில் தங்கி பல தடவைகள் பல நாட்கள் வனங்களில் சுற்றி தாவரங்கள். அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள், பற்றி ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமாக நூல்கள் எழுதியவர்.

செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் நாட்டுப்புற இலக்கிய ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.

திருக்குறள் உரை, திருவள்ளுவர் இன்ப நாடகம் எழுதியவர். புதுக்கவிதையில் முத்தொள்ளாயிரம் எழுதியுள்ளார். மணிமேகலை இலக்கியத்தை நாடகமாக எழுதியவர். மணிமேகலைக்கு உரை எழுதியவர். புதுக்கவிதையில் மணிமேகலை எழுதியவர்.

இராஜபாளையம் மணிமேகலை மன்றத் தலைவர்.
விலாசம்:
குறிஞ்சிச்செல்வர். கொ.மா. கோதண்டம்
குறிஞ்சித்தெரு, முத்து நகர்
பி.எஸ்.கே. அஞ்சல்
இராஜபாளையம் - 626 108
*

 

திங்கள், 5 செப்டம்பர், 2011

கனவு நுரைத்த கவிதைகள்

 
 
இரவு வானம்

சூரியன்-
பகலில்
மத்தாப்பெரிக்கிறான்.
நெருப்பு பொறியில்
துளைகளாகி போகிறது
இரவு வானம் .



களவாணி

இதமான மௌனத்தை பெயர்த்து
களவாடத் தூண்டும்
இரவு வானில்
சிதறி கிடக்கம்
நட்சத்திரங்கள்




மனசுக்காக …

இருபதாயிரம்
துளைகள்
வியர்வை சொரிய
எங்கேனும்
இரு துளையுண்டா?
இனியவளின்
இதயம் நுழைய …




நிலா முத்தம்


கிண்ணம் நிறைய
நீரெடுத்து
கால்கள் நனைத்து
கொள்கிறேன்
நழுவி விழுகிறது
நிலா !



திருந்த செய்


பிழைகளெல்லாம்
பழைய பித்தளை பாத்திர
துளைகள்
திருத்தங்கள் ளெனும்
ஈயம் பார்த்து
அடைத்தல் சிஷ்டம்
முலாம் பூசி
மறைத்தல் கஷ்டம்

நன்றி  :  திண்ணை இணைய இதழ்  




கனவோடு..

கனவில் சிறகொடியும்
காதல் கிளிகளின்
கூண்டு





பொய் முகம்

புகழ், நிழல்
பொய் முகங்கள்

நெருப்புள் இறங்கி
தீய்வதாய் உணர்

எந்த புகழ்
யார் நிழல்
உடன்கட்டையேறும்?



பொய்யுறவு


மல்லிகை வாசம்
இரவெல்லாம் நுகரும்
ரோஜா முற்கள்





பட்டறை

நெருப்பு காயும் இரும்பு
சிவந்து போன பார்வை
துருத்தியூதும் பையன்

நன்றி  : கூடல் இணைய இதழ்
 
 

உழைப்பின் பிழைப்பு

உழைப்பின்
உள்ளங் கைகளில்
தனக்கான கை ரேகை
கணித்துக் கொள்கிறது
எஜமானத்துவம்

வியர்வை கொட்டி
விதைத்து
களைப்பின் கதிர்கள்
அறுவடை செய்து
வலியால் லாபமடைந்து
மீண்டுமொரு
வெள்ளாமை விரும்பி
காத்திருக்கிறது
உழைப்பு

விடிவில்லா வறுமையின்
மகசூலுக்காக.



பார்வை

 
தொலைவிலிருந்து கேட்கும்
உன் அழைப்பின்
வாசம் உணர்கிறேன்
அருகாமை நெருங்கி

கழிந்த இரவின்
கடந்த வேகத்தின்
ஒலி சிதறல்களை
பொறுக்க முற்பட்டு
தோற்றுவிட்டேன்

இருள் காட்சிகள் மட்டும்
இமைக்குள்ளான நாடாவில்
பதிவாயிருக்கும்

உடனிருக்கும் கைக்கோலின்
அழை மணியை
பழுது நீக்கிக்கொள்
என்றுமே நலமோடிருக்கும்
கப்பிய இருளையும்
உடனிருக்கச்சொல்

தேநீர் கோப்பை நிறைய
தீங்கிளைத்த சங்கடங்களை ஊற்றி
ஜோல்னா பைக்குள் பதுக்கி வை

விளையாத நம்பிக்கையோடு
நானும் உன்னை
நெருங்கி விட்டேன்
நீண்ட நாட்களுக்கு பின்

தட்டில் விழுந்த
மோர் சோற்றில்
உன்னுள் திருடிய
தியாகம் குழைத்து
வைத்திருக்கிறேன்
என் மனசின் சாட்சியை
ஊறுகாயாய் தொட்டுக்கொள்

காசொலிகள் மட்டுமே
கவனமில்லை
பார்க்க, கேட்க, உணர முடியாத
ரூபாய் நோட்டுகளில்
எழுதப்பட்டிருக்கும்
நம் இருவரின்
கருப்பு கையெழுத்து

ரெட்டை நொங்கு நீக்கிய
பனக்காய்களாய்
நெகிழும் கண்களில்லா பிழைப்பின்
துணையின் திடத்தை
ஊடகமாக்கி
தெருவோரம் ஒட்டி செல்ல
வண்டி தயாரிக்கலாம்

சத்தியத்தை முன்னிறுத்தி
கொட்டாங் குச்சியின் துணையோடு
நெடுந்தொலைவு வரை
மனக் காட்சிகளின் பாதையில்
இருள் வண்டி
ஓட்டிக் கொண்டிருக்கலாம் .

ஓடி வராதே!
ஒட்டியுள்ள கருந்திரை
உடனிருக்கட்டும்.






மணல் நினைவுகள்

  திருப்தியளிக்கத்தான்
செய்கிறது
புது வீடு கட்டும் சூழல்
சிவப்பு, சிவப்பாய்
உழைப்பின் இரத்த ஓட்டத்தை
நினைவில் கொணரும்
ஒட்டு மொத்த
செங்கற்களில் நடுநடுவே
பக்குவமாய் பிடித்தத்தில்
பற்றிக் கொள்கிறது
நிம்மதியின் சாந்து கலவை!
வெளிப்புற பூச்சுக்கென
கொட்டி வைத்த ஆற்று மணலில்
'கிச்சா''கிச்சா' தாம்பூலம்
விளையாடி மகிழ்கிறது
கூழாங் கற்கள் தொய்வின் துணையில்
இன்னமும் உயிர்பித்திருக்கும்
மீன் குஞ்சொன்றின் நினைவு!

நன்றி :  கீற்று இணைய இதழ்
 
 
 

  எமக்குள்ளே இடைவெளி

யாத்வி-
கவிதை மரபின்
மோகப் பிழை

சங்கீதம் கற்போம்
எட்டாவது சுரம்
நீ.. நெடில் அவள்

உரசல்களுக்கு
விடுப்பில்லை யினி
இரவின் தொடர் சுற்று

பத்துக்கும், ரெண்டுக்கும்
இடைபட்டு
கடக்கும் முள்
முறியும் நேரம்
பன்னிரண்டு

கழுத்து சுற்றிய வட்டம்
முத்தங்களின்
பாசி மணி மாலை

சுடர்-
மங்கி,தொய்ந்து
எரியும்
உதடு ஊரும் எச்சில்
அளவு தீராமல்

விரல்கள் அணுகும்
வீணை நரம்புகள்
பாய்கிற பயம்

எட்ட தாவி
புதையுண்டு போகும்
வெட்கம்

கலகங்களின் சூட்டில்
தணிகிறது
உட் பருமன்

ஆயிரம் கோடி
இறகுகளோடு
பட்டாம் பூச்சிகள்
அடைபடும் தனியறை

ஏகாந்த தேனடை
எங்கேனும்
வடிய வடிய கசியும்
துளி ஏக்கம்

அதற்கப்பாலும்
எமக்குள்ளான
இரவையுடுத்தி
இடைவெளி
மறைக்கிறோம்.
 
 
நன்றி :  வார்ப்பு  இணைய இதழ்

சனி, 21 மே, 2011

காற்று வெளியில் கவிதை பயணம்




பரம பாதம்



வெகு நாட்களாய்
தவமிருந்தது
இதற்காகத்தான்.

வெறிச்சோடிக் கிடந்த வீதியில்
விதியை தலைக்கு வைத்து
படுத்திருக்கும்
பித்து பிடித்தவளிடம்
கொடுத்துவிடலாம்.

ஒன்பதங்குல பாதம்
நிச்சயமவள்
தொலைத்ததில் ஒன்று தான்
தொலைந்தபோது
ஆறேகால் அங்குலம்.

மரமாசாரி எவரோ
செதுக்கி இழைத்திருப்பார்
திரள் திரளாய்
தேய்ந்திருக்கிறது பாதம்.

நாலாபக்கமும்
விரல்களோடு சேர்ந்த
வளர்ச்சி உப்பியிருந்தது.

விட்டுப்போயிருந்த
விரல்களின் பதிவில்
மரப்பல்லியளவு புடைத்த
விடுபடாத ஞாபகங்கள்.

யாரேனும்
குத்தகைக்கெடுத்து
சுட்டெரிக்கும் வெயிலில்
நடத்தியிருக்கலாகும்
ஒட்டகம் மேய்ப்பதற்கென..
மரமரத்த தடயங்களிருந்தது.

நெருஞ்சி முள்
தைத்த துளைகள்
துளியேதும் மூடப்படாமல்..
வனங்காட்டு ஜாகையில்
கொத்தடிமை கொத்தில்
அடைபட்டு மீட்டப்பட்டிருக்கலாகும்.

இருப்பினுமிந்த
சப்பைக்கால் பாதம்
அழகேசனுடையாதாய் யிருக்கும்
காவலர் தேர்வில்
கழிக்கப்பட்ட பாதம்
கவனமீர்த்திருக்கும் அந்நாளில்.

பித்த வெடிப்பின்
இரத்த கசிவு கரைகளை
எவர் வந்தேனும்
பார்வையிடலாம்
சாட்சி சம்பிரதாயங்கருதி..
ஆமணக்கு எண்ணெய்
வெடிப்பின் வாய்காலூற்றி
அழுத்தி தேய்த்த ஆத்தாளை
அடியோடு மறந்த பாதம்.

'வெண் தாமரை
செந்தாமரை
பொற்றாமரை
வஜ்ஜிர தாமரை'யென
செல்ல பாதம் பிடித்து
கொஞ்சி முத்தமிட்டு
அப்பத்தாள் கொட்டிய பாசத்தில்
வழிந்தோடிய பாதம்.

கண்களில் லொற்றி
அள்ளிய பாதத்தை
இடுப்போரம் சொருகிக் கொள்கிறாள்.
எதிர்திசை பரவி
ஓடோடி வரும் இன்னொரு பாசம்.

ஊர் உடுத்திய அழுக்கு
வெளுத்து துவைக்கும் நதியோரம்
படித்துறை வழுக்கி
பரிதவிக்கவிட்டு போனதவள்
பத்திரை மாத்து பாதமென
மார் தட்டியழுகிறாள்.

ஒரே பாதம்
ரெட்டிப்பு பாசம்
ஒப்படைப்பது யாரிடமெனும்
கேள்விக்கு மத்தியில்
பாதம் தொட்டு தழுவி
பணிந்து யாசிக்கிறது
பழைய பாதம்
தொடர்பில்லா தூரத்தே
தொலைத்து விடச்சொல்லி ..


நன்றி : கீற்று இணைய இதழ்





புன்னகை பூக்கள்



மனசுக்குப் பிடித்திருக்கும்
மலர்க் கொத்தில்லாத
அந்த வரவேற்ப்பு.

புன்னகை பதியமிட்ட
பூங்கொத்தே
போதுமானது.

நெஞ்சச் செடிகளில்
பன்னீர் மலர்கள்
பூத்துக் கொள்கின்றன.

ஒப்பனைகள்
வாடிப் போகிறது.
நன்றி : கீற்று இணைய இதழ் 



பணிதல்


அகல் விளக்கின்
சுடர் மொட்டுகள்
கசிந்த வெப்பத்தில்
காற்று வெளியின்
கன்னம்
சூடேறி போகிறது.
கோபத்தில் வளி
தீபத்தை
அணைக்க முயல்கையில்
உள்ளங்கை கூப்பி
மன்னிப்பு கேட்டு
தாழ்பணியும்
இளஞ் சுடர்
பணிதலின் வியாக்ஞானம்
பளிச்சென
சொல்லி போகிறது !
நன்றி  :  வார்ப்பு இணைய இதழ்


 வெளி ...

பல நூறு மைனாக்கள்
பறந்தன வானில்
வேடநெங்கே
வலை விரிப்பான்???
 நன்றி :  கூடல் இணைய இதழ் 
 
 








































சனி, 7 மே, 2011

இயலாதோருக்காக...

அன்பானவர்களே,

மின்சார இரயில் பயணம் பெருவாரியான மனதில் மின்சாரம் பாய்ச்சியிருக்கும் . பார்வையற்றோர் பலரின் பாட்டு தாலாட்டில் 'தடக் ' ' தடக்' கென நடனமாடி கொள்கிறது இரயில். உச்ச சுரத்தில் சிலரின் பாடல் உயிரின் ஆழம் பார்த்து தூர் தொட்டுவிடுகிறது .

இப்போதெல்லாம் நானந்த பயணம் நேசிக்கிறேன் .
" இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை "
நாகூராரின் பாடலில் நெஞ்சோரம் ஈரம் கசிந்திருக்கத்தான் வேண்டும். இயலாதவர்கள் இறைவனை யாசிக்க இயல்பு மனிதர்கள் இவரை நேசித்தாக வேண்டும்.

" பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு " -- அவரின் குரலில் சிறகடிக்கிறது பலரின் நிம்மதி.
இருபது நிமிடத்தில் எனைப்போல் இதயம் தொலைத்தவர்கள் எத்தனைபேர். உதவும் கரங்களில் ஊரிக்கொண்டேதானிருக்கும் இளகிய மனது.

இப்படித்தான் மாற்று திறனாளி யொருவர் மதிய வேலை இரயில் பெட்டியேற... இசைக்கான எம் செவிப்பறைகள் அசைந்து கொடுத்தன . அவர் தொடங்கினார் .

" கொடுத்ததெலாம் கொடுத்தார் - அதை
யாருக்காக கொடுத்தார் .
ஒருத்தருக்கா கொடுத்தார் - இல்லை
ஊருக்காக கொடுத்தார் "
அங்கேயொரு ஆச்சர்யம் உணர்ந்தேன் .
பயணிகள் அனைவரும் பைகள் துலவினர் .
" உனக்காக ஒன்று
எனக்காக ஒன்று "
தட்டின் காசொலி கணீரென கேட்டது . நடப்பவை நியாயமாக பட்டது .


யார் எவ்வளவு கொடுத்திருந்தாலும் பகிர்ந்துண் என்கிற கோட்பாடு அந்த வேளையில் எல்லோருடைய நெஞ்சிலும் சாட்டையடியாய் வலித்திருக்கும் .

நிறைந்த மனதோடு கொடுத்தன கைகள் . நிரம்பியிருக்கும் அத் திறனாளியின் கண்ணீர் பைகள் .
பல பார்வையற்றோரின் பலம் இதுதான் .

நம்மோடு பயணிக்கிறவர்கள் நலமோடு வாழ தலைக்கொரு 'சும்மாடு' சுமக்கலாம் .
பைகளில் கொஞ்சம் சில்லறைகளோடு பயணிப்போம் . இயலாதோரின் கல்லறைகளை தகர்த்தெடுப்போம்

அன்புடன்
கொ.மா.கோ.இளங்கோ