வியாழன், 28 ஏப்ரல், 2011

காற்றில் உலவும் கவிதை


நிரந்தரத்தின் இழப்பு 


இது நாள் வரையிலான
சிரமங்களின்
இறுதி மதிப்பீடு
இனியும் வெளிவராவண்ணம்
இருப்பில் முடக்கியதொரு நெஞ்சம்
எதிர் வரும் தருணத்து
இக்கட்டான கதிர் வீச்சின்
அழைப்பு மணியோசை கேட்க
துயரத்தின் சாவியிட்டு
இலகுவான நிரந்தரங்களை
இழக்க காத்துக்கிடக்கிறது.
கண்ணீரின் அங்கீகாரம்
கவனிக்கப்படாமல்
முடங்கியே கிடக்கிறது.
தளர்ந்து போன மனதில்
முனகல் சத்தம் மிச்சமிருக்கக்கூடும்.



 

 

பிரியங்களின் பிரசவம் 

 

பரந்த காற்று வெளியின்
அடித்தளத்து நுண்படலம்
சமவெளியின் அந்தரங்கத்தை
மறைத்து போர்த்தி பரவியிருக்கும்

நிலமங்கை பேரழகின்
மேல்தளத்து மென்படலம்
மன்மத பொக்கிஷத்தில்
அவிழாது மயக்கம் பிரதிபலிக்கும்

இதற்கிடையே-
எதிர்பாரா நொடிப்பொழுதில்
ஊடலின் விழுது பற்றி தாவி
மௌனம் கலைத்து
தளிர்த்து விடுகிறது
பிரியத்தின் மனமொத்த விதையொன்று...


நன்றி   :  கீற்று இணைய இதழ்






தவிப்பு


நிச்சயம் மழை வரும்
களிப்பில் ஆடும் மயில்
நனைந்தபின் தவிப்பில்!


சுடும் வெயில்


நீரில்லா ஆற்று படுகை
நெடுநேரம் உறங்கியே கழிக்கும்
மதிய வெயில்



சிதறல்


உடைந்த கல் மூக்குத்தி
சிதறல்கள் அனைத்திலும்
பதிந்ததவள் முகங்கள்


காத்திரு


காத்திருக்கும் வண்ணத்துப்பூச்சி
வழிநெடுக பூஞ்செடிகள்
கருத்துப்போகிற மேகம்


நன்றி   : கூடல் இணைய இதழ் 





உறுதியாய் இரு...

ஞானப் புதையலின்
இருப்பிடம் தேடி
நாமெட்டும் முதல் சந்து
தேடல்

தேடுதல் பயணத்தின்
ஆர்வம் அடிக்கல்
இலட்சியம் மைல்கல்
ஒழுக்கம் திசை காட்டி

செய்கையின் நடை பாதையில்
பிழை யெனும் புதை குழி
தென்படலாகும்
பிழைசெய்தல் பிழை யில்லை
மரத்தில் துளையிடல்
பறவையின் வாழ்வு தர்மம்
துளைகளுள்ள மூங்கிலும்
மரங்களில் துளைகளும்
நிர்பந்தங்கள்

யதார்த்தத்தின் படித்துறையில்
தவறுகளின் பாசி படிமம்
நிதர்சனம்

தடங்களை விஞ்சு
நேரத்தை மிஞ்சு
நேர்மைக்கு அஞ்சு
தப்பெனில் கெஞ்சு
கடமைகள் கொஞ்சு
'பொறாமை' கழுகின் குஞ்சு
இழந்ததெல்லாம் நஞ்சு
இனி யெல்லாமுனக்கு பஞ்சு

விமர்சனங்கள்- வினா
விருப்போடு விடையளி
வெற்றி தேடு !
உண்மையாய் உள்ளவரை
உறுதியாய் இரு...


வள்ளுவனின் எழுத்தாணி
உள்ளங்கை வருத்தி
உருவானது
வள்ளுவர் சிலை

மயில், கணபதி, நந்தி, துர்க்கை
முடித்த கைக்கு பரிசு
இப்பணி

உளியும் சுத்தியலும்
ஓயாது உழைத்திருக்கும்
திருப்தியில் பாறாங்கல்
சிறந்த மொழியாக்கம்

வெயிலின் உக்கிரம் ஓங்க
சில வேளை
வியர்வை உறிஞ்சிய சிலை

முடிவுக்குவரும் மொழியாக்கம்
பொருட்பவின் வள்ளுவன் தயார்
எழுத்தாணியின்றி

வெடித்தது யோசனை
உளிஎடுத்த சபதி
சிலையின் உள்ளங்கை திணித்தார்

வீதி நடுவே மேடை நின்று
ஈரடி செய்யுள் எழுதும்
இனி இச்சிலை
சுத்தியலின் இயற்பால் தொடங்கி. 


பணிதல்

அகல் விளக்கின்
சுடர் மொட்டுகள்
கசிந்த வெப்பத்தில்
காற்று வெளியின்
கன்னம்
சூடேறி போகிறது.
கோபத்தில் வளி
தீபத்தை
அணைக்க முயல்கையில்
உள்ளங்கை கூப்பி
மன்னிப்பு கேட்டு
தாழ்பணியும்
இளஞ் சுடர்
பணிதலின் வியாக்ஞானம்
பளிச்சென
சொல்லி போகிறது ! 


நன்றி   :  வார்ப்பு இணைய இதழ் 




இழப்பாறு

சனிக்கிழமை சாயங்காலம்
துக்கம் அனுஷ்ட்டிக்கப்பட வேண்டிய
மாலைநேர நெரிசலின்
கைக்கெட்டிய வாரச்சம்பளத்துள்
மிச்சமிருந்து போகிறது
ஐம்பதின் மடங்கில் இழப்பும்
நூறின் மடங்கில் வருத்தமும் ...

எதிரெதிரே அமர்ந்து
நானும், நடமும்
தாயக் கட்டை ஆடுகிறோம்
நடத்தின் கையகன்று
விழுவதெல்லாம் 'ஆறுத்தாயம்'
விருத்தங்களின் கேளிக்கைகள்
'பழம்' பாட வாய்ப்பின்றி
பரிதவிப்பில் தொடர்கின்றன
சதுரங்க மும்முரமும்
பிறிதொரு தாயங்களை எதிர்நோக்கி ...

வாழ்வு சூழ்ந்து இழப்பு
இழப்பு சார்ந்து வாழ்க்கை

அன்றாட நிகழ்வுகளின்
அலுவல் வரவேற்பறைகளில்
வழுவிழந்த மதில் முழுதுமென
இயலாமை ஆணி அறைபட்டு
இழப்பின் புகைப்படங்கள்
உடன்பாடு விலகி கோர்க்கப்படும்
அதன் பரிமாணங்கள்
அணுவணுவாய் தகர்க்க படுமெனும்
அபரிமித நம்பிக்கையை தொடர்ந்து...

இழப்பின் உள்ளங் கைகளில்
எனைக் கொடுத்துவிட்டு
நகர்கிறேன்
நான் நீரென்று தெரியாமல் போகுமான
தருணங்களில் ...

பிறழ்கிற புதிர் வாழ்வின்
நடம் தற்காலிக சரிவு
நிரந்தரத்தின் சமாதியல்ல ...
 

பந்தய வாழ்வு
 போட்டியை 
நிறைவு செய்தல் 
பங்கெடுப்போரின் 
முயற்சி 

நிறைவு செய்தலைப் 
போட்டி யாக்குதல் 
பரிசு வெல்வதன் 
சூழ்ச்சி 

பரிசுகளற்ற போட்டியின் 
பந்தயக் குதிரையாய்
ஓட்ட முனைப்பில் 
இன்னமும் நீள்கிறது 
வாழ்வின் நீட்சி!
 
 நன்றி   :  உயிரோசை இணைய இதழ்

வியாழன், 10 மார்ச், 2011

இளங்கோவின் விரல்களில் முளைத்த தமிழ் கவிதை வேர்கள்


தோல்விக்கான அடையாளம்


 
அழைக்கிறபோதேல்லாம்
உன் பலத்தின் வசப்படுதல்
எனக்கினி சாத்தியமில்லை.

வளியின் சுழற்சியில்
இறுபட்ட சருகென விரைகிறது
குறுமிளகு ஆயுள்.

இரட்டை தாவணியை
உயர்த்திப் பிடித்து
ஏகாந்த வெளியின்
இரம்யத்துள் சிறகடித்தல்
இன்றைய தினத்தில் பதிவான இச்சை.

எனைத்தேடி அலையாதே !
செம்பருத்தி இதழ் மறைவில்
நெடுநேரம் கழித்த
நேற்றைய சந்திப்பு மூலதனமல்ல
அதன் தனிமான அழுத்தம்
இனி மீள்வதற்கில்லை.

என்மீதான ஆசை
உன்னுள் ஆதிக்கம் செலுத்துவதாய்
உளறிய வழக்கை
பின்னெடுத்துக்கொள்

அடர்வான ஆச்சரியத்துள்
அலைந்து அடைபடு
தசை தங்கிய தாகங்கள்
உதிர் படும் தீந்தை
புனைவில் மீட்ட சுரத்தை
ஒப்பனை செய்தல்
ஒப்புக் கொள்வதற்கில்லை.

ஊர்தலின் நிர்பந்தங்கள்
கடந்த முனைப்பில்
இருவருமே சிறகடித்தோம்
மீண்டுமொரு ஊர்தலுக்கான பயிற்சியின்
அவசர ஆளுமையில்
அவதரித்த உணர்வுகள்
அனிச்சையாய் தோற்றுபோகலாகும்.



நன்றி : கீற்று இணைய இதழ் 



நானென்ற விமர்சனம்

யாராவேன் நான்?
அறிமுகம் யாதென தெரியாதொரு
தருணங்களை முடிச்சிட்டு 
தலையிருத்தி சுமந்து
நிற்கிற மேகம் 
எதிர்படுவோரின் 
விமர்சனத்துள் முறிந்து 
சாக்கடை மழையெனப் பெய்கிறது. 

எச்சில் படும்
விமர்சனங்களின் கதிர்வீச்சில்
இதயப் பூங் கொடியின்  இலைகள்
பச்சயமற்று மடிதல்
வாடிக்கையாகிறது.

நிலையற்ற மதிப்பீடுகள்
நெஞ்சக் குடுவையின்
அமிலக்கலவையை
நிலைகுலைக்கலாகும்.
நல்லவை கெட்டவை பிரித்தலின் சாத்தியம்
இல்லாமல் போகிறது
இயல்பான வேதிய கலவையுள்.
குறைகளின் நீட்சியை
பிரதிபலிக்கும் கண்ணாடியுள்
சுயவிமர்சனம்
பாதரச பூச்சென
படிந்ததின் உண்மை
நிராகரித்து தொடர்கிறது
என் பயணம்...
திரும்பிய திசையெலாம்
மெல்ல சூழும் விமர்சனங்களின்
திராவகச் சாலைகள்!

நன்றி : கீற்று இணைய இதழ் 




சிக்கலில் சிக்கிய வினாக்கள்



மனசெனும் படகில்
வினாக்களின் பயணம்
துடுப்படிப்பாரின்றி
தளும்பி... ததும்பி..
நகர்கிறது
தொலைவில் புலப்படும்
சஞ்சல சுழலில்
சிக்கி தவித்தல்
உறுதி செய்யப்பட்ட நிமிஷங்கள்
நெஞ்சக் கரைகளில்
தொங்கும் மரங்கள்
கிளைகள் பட்டுவாடா செய்த
புயல் காற்றால்
தள்ளப்படுகிற படகு
தற்காலிகமாய்
வேற்றுப் பாதையேற்று
தொடர்கிறது..
பொருளடக்க விளக்கங்களின்
விவரணம் தேடும்
பயணத்தை
அணை சேர்ந்த தருவாய்
தவறி முறிந்த படகு
அள்ளி வீசப்பட்ட வினாக்கள்
தப்பியனவை மட்டும்
மதகு மோதி  ஒட்டிக்கொள்ளும்
மீண்டும் விடைகள் தேடி
எட்டிப்பார்த்த தருணம்
அணையில்
நீர் வரத்து அதிகரிப்பின் 
எச்சரிக்கை கொடி

நன்றி : பதிவுகள்  இணைய இதழ்



கிராமங்கள் கற்பிக்கும்


விரிந்த நெஞ்சு
துரித தேடல்
தெளிந்த பார்வை
தற்காப்பு கணிதம்
பகைவெல்லும் பயிற்சி
பொது உயிர் காப்பு
தியாக பொறுப்பு
வேண்டிய அளவைகளில்
வெற்றி கண்டு
பொறுக்கப்பட்ட பூனைகள்
வித்தை மறந்த வேளை
இல்லவேயில்லை...
வீரம் விட்டொழித்த காலம்
வேட்டையாடப்படுகிறது
தலைவர்களின் உயிரும்
ஆட்சியர் மனைவியின் கண்ணீரும்
வியூகம் அழிக்க தவறியதன்
விளக்கம் அளிக்குமுன்
நினைவிருத்திக்கொள்ளலாம்
வந்த பாதை பின்னோக்கி  போகையில்
வழி மறிக்கும் ஆலமரம்
வடக்குப்பக்கம் காணியில்
வாளெடுத்து குதிரையேறி நிற்கும்
ஊர்க்காவல் மாசனக்காளை
கற்காத ஓலை
கடமை தவறாத சிலை
மொத்த கிராமத்து மூச்சும்
மாரி கொத்தனார் வடித்த மீசையில்
காத்தலின் குறள் கேட்க
கள்புட்டி படைத்தல் போதும்
மாசனக்காளை
கிராமத்து பூனையல்ல
கரிசல் வாழ்வின் சேனை !

நன்றி : பதிவுகள்  இணைய இதழ்



பல்லுயிர் ஓம்புதல் தலை




நினைவிலில்லை
பச்சை தென்னக்கீற்றில்
கூரை வேய்ந்த நாள்
சூரனை வதம் செய்யும்
சொக்கன் கண்மாய் இறங்கிய நாள்
விடியற்காலை தொடங்கி
வான் கருக்கும் வேளைக்குள்
புதிதாய் தொப்பி அணிந்த குடிசை
கீற்றினை பகுப்பார் நைனா
பாதியில் அறுபட்ட பச்சை சருகு
பொறுத்துக்கொள்ளும் வலியில்
விரல் சூப்பிகொண்டேன் நான்
இரத்தம் கசிந்த பிரம்மை


மழை, வெயில் தாக்குதலில்
மக்கிப்போன குடிசை
துண்டு துண்டாய் சருகுகள்
கொட்டித் தீர்க்கும்

மாற்று கூரை வேயும் முடிவில் நைனா
மறுத்திருப்பேன் நான்
விளக்குதல் கடினம்
உதிர்ந்த சருகொன்றை
உள்ளங்கை வைத்தேன்
ரேகை பதிந்து ஊர்ந்திடும்
கரையான்கள் ...



kelango_rahul@yahoo.com


நன்றி : திண்ணை இணைய இதழ்


தமிழ் கவிதை தேரின் தொடர்கிற பயணம்



யாரை விடும் பசி


பறவையின் அலகில் புழு
குதூகலத்துடன் குஞ்சுகள்
கண் பார்வை தொலைவில் கழுகு!



மாற்றம்

கால் ஒடிந்த மாடு
சந்தோசத்தில் கன்று
மிஞ்சியது மடு!


அழுத கண்ணீர்


கரையோரம் கருவேலமரம்
வெட்டிச் சாய்க்கிறான்
வியர்வையில் நனையும் வேர்.




மலரும் பூங்கா

அந்தி சாயும் அழகில்
பூ பூத்து குலுங்கும்
பூங்காவின் இருக்கைகள்


அழைப்பு ஒலி

அவள் திட்டிய வார்த்தைகளை
சேமித்து வைத்திருக்கிறேன்
கைப்பேசி அழைப்பென


காதலர் தினம்

பத்திரப்படுத்தினேன்
பலூன்கள் அனைத்தும்
அவள் நிரப்பிய காற்று


காதல் இணைய(யு)ம்

பயனர் பெயர் 'நான்'
கடவுச் சொல் 'நீ'
காதலுள் 'நுழைக'!



முறிந்த கனவு


இரவில் எழுதிய கவிதை
இலக்கணப் பிழையோடு விடியும்
கனவு!

விடுபட்ட இருமுகம்

அவளின்
கால் பட்டு சிதறும்
மழை நீர் முத்துக்களில்
தொலைகிற என் முகம்
கரைந்து
நொறுங்கி
இடறி சிதறி
காணாமல் போகின்றன
தேடி பார்க்கிறேன்
பார்வை வீசி
பாதம் வரையிலும்
மழை நின்று
மிதமாய்
குளிர் வாடை காற்று
உற்சாகத்தில் என்னவள்
என்னவென்று தவிக்கிறேன்
இருவரின் முன்பு
புதிதாய்
தேங்கிய நீர் குட்டை
தெளிவாய் தெரிகிறது
தொலைந்து போன
என் முகம்
பிரகாசமாய்
தோள் சாய்ந்து
சந்தோசத்தில் அவள்
அழகாய்...
அழகழகாய்...
இரு முகம் தண்­ணீரில்!
  
நன்றி :  கூடல் இணைய இதழ்

புதன், 23 பிப்ரவரி, 2011

படங்களும் கவிதை வரிகளும் -- வார்ப்பு இணைய இதழில் வெளிவந்தவை.

படங்களும் கவிதை வரிகளும் -- வார்ப்பு இணைய இதழில் வெளிவந்தவை.



தொலைந்தது மீண்டும் வந்தது

மனதின் அடிநாளங்களில்
மையம் கண்டு
நரம்பு கற்றையுள்
பிளம்பென புகுந்து
மௌனம் பறித்து
ஞானம் வருடி
மூளை செதில்களை முத்தமிட்டு
உள்ளங்கை தாவியோடிய
நினைவுகள்
ஒரு பொழுது
உயிர் கூரையில்
உலர்ந்து தொலைந்தன

நேற்றைய பகலில்
நெருப்புதிர்த்த காற்றில்
பரவிய நினைவுகள்
நெஞ்சில் சுழன்று
தாக்கம் தனிந்த நொடியில்
தொகுத்திருப்பேன்
புதுக்கவிதை வரிகளாய்…



2011 - நாள் நலமோடு தளிரும்




நாள் நலமோடு தளிர
தியாகம் தொடக்கம்

ஹைட்ரஜன் வாயுவின் தியாகம்
ஆக்சிஜன் அணுக்களின் அர்ப்பணம்
உள்ளங்கை தேங்கிய தண்ணீர்

வழிந்து போன சொட்டொன்று
சூத்திரம் சொல்லும்

கருத்தரித்த மேகம்
கனமழை பெற்றெடுக்க
மலைகள் மோதி
மரங்கள் சரிந்து
முள்முனை கிழிபட்டு
ஐந்தறிவு சாதி மூத்திரம் சுமந்து
இடம் மரித்த பாறைகள் இடர்ப்பட்டு
கூழாங்கற்களை குருமணலாக்கி
வெள்ளமென ஓடிவரும் நீர்

கற்றுக் கொள்கிறோம்
தடைகள் தாண்டியே வாழ்வு

2011 - ல்
தமிழ் சனமே !
கால்களுக்கு நீருற்றி
கடந்தன கழித்து
நிலைவாசல் தாண்டலாம்

நாள் நலமோடு தளிர
தியாகம் தொடக்கம்


காதல் போயின் ...





பாவையவள் கன்னம்
பதியமிட்ட புன்னகை
பொன்கோர்த்த மனதின்
ஈசான மூலையில்
உணர்ச்சியுள் பரவி
கிளர்ச்சியின் மெய் கூட்டி
பூப்பெய்திருக்கும்

உதடு நழுவிய மொழி
உயிர் பற்றி ஏறி
இதய களஞ்சியத்துள்
இடம் பெயர்ந்து
காப்புரிமை பெரும்
சரீர வேதத்து
தூண்டு பொருள் அவள்
அகம் பூத்த மென்மையுள்
மகரந்தசேர்க்கை

ஒற்றை நேர் கோடு
புழுவின் பகுதி
காதல் தூரிகை
வளைகோடு வரைதலில்
வண்ணத்துப்பூச்சியின் முழுமை

அவளேழுதிய வரிகள்
இவனரிவின் பலம்
பத்திரண்டு காலம்
பதம் பட்ட கள்
குறிபேட்டில் முதல் அத்தியாயம்
குற்ற உணர்ச்சியின் குளுமை
இரண்டாம் பகுதி
இதயம் எழுதிய மௌனம்
பின் வரும் மூன்றில்
ரசிப்பின் முத்த ருசி
நான்காம் பாடம்
நழுவிய வெட்கம் நனையும்
அத்தியாயம் ஐந்தில்
இதழ்களின் ஆதிக்க ஈரம்
காதல் நன்னூல்
கருப்பு மை காவியம்

உறைந்து போன எழுத்துகள்
படிக்கிற ஆவல்
புரட்டிய நாட்கள்
புதிதாய் பல முறை
உயிர் சலவை பெரும்
மூச்சு வாங்கும் உணர்ச்சிகள்
ஆயிரம் அர்த்தங்கள்
அடுத்தடுத்து அவதரிக்கும்

புவியியல் கற்கும்
பூமத்திய ரேகை காதல்
வரலாற்று கோளத்து
விட்டம் காதல்
கணிதத்தின் கோணம்
இயற்பியலில் விசை
வேதியலில் கலவை
கணினியின் செயலி
எல்லாம்
அன்பின் அடக்கம்
காதலின் கசிவு
காப்பியங்கள்
அன்பின் வழியது
உயர் நிலை
காதல் வண்மை
மெய்த்துணை திண்மை

காதல் போயின் ...
போகும் காதல்
சாகும் காதல்
கடல் வழிந்த நாட்கள்
நிலம் கரைந்த மணித்துளி
உயிரற்ற புவியுள்
உடலில்லா உலகில்
இறுபட்ட மனங்களுள்
ஈருயிர் நெருப்பில்

தடை கண்டு
வலவை போதல்
அன்பிற்கில்லை
வீழ்ந்து மடிதல்
காதலின் பண்பு!

நன்றி : வார்ப்பு இணைய இதழ்



திங்கள், 21 பிப்ரவரி, 2011




Monday January 17, 2011

கருவெட்டா தமிழ் அணுக்கள்!

கொ.மா.கோ.இளங்கோ




தலையணை
நிரம்பிய உறக்கம்
நித்திரையின் உள்ளீட்டில்
உற்புகுந்து
வேரற்று விருட்சமென
கற்பனை பரப்பி
நிமிடங்களின் நீளம் வளர்த்து
கருகி மடியும்
கனவுகள்

இதயம் எத்தனித்த அம்புகள்
அங்கிங்கெலாம் அலைந்து
ஆரண்யம் அடங்கும்
அரக்கன் அலங்கரிப்பான்
மகிழம்பூ மார்சேரும்
கோலமிடுபவள்
கைக்குட்டை காதல் வரைவாள்
விமான பணிப்பெண்
விகடம் கேட்ப்பாள்
மான்கள் பசுவாகும்
மாவடு சுவையில்
பலாச்சுளை வாசனை யனைத்தும்
கனவு கொண்ட காண்டங்கள்
என்னுள் ... இல்லை இவைகள்
இதய சாகுபடி
தமிழ் கனவு!
கவிதை பித்தம்!

ஆறாம் வகுப்பு...
புத்தகப்பையில் தமிழ் பாட நூல்
தலைகீழாய் தூங்கும்
வெள்ளை காகிதத்தில்
வினாக்கள் மட்டுமே எழுதிய நாட்கள்
சோனையாண்டி வாத்தி கைகளில்
காயமானது கன்னம்
தத்தளித்திருந்த தமிழ்
தடுமாறி கரை சேரும்
எழுபதுகளின் பிள்ளைத்தமிழ்
அசை கற்று மரபின் பல்லக்கேறும்

இந்நாள்...
கவிதை எழுதாது
கனவில்லை
தலையணை நிரம்பி தமிழ்
ஈரடி சீரில் மூச்சு
இதய அசைவு எதுகை
மூளை தூண்டும் மோனை
விரல் சுண்டிய விருத்தம்
இருளுக்கு பயந்து
என் படுக்கையறை பதுங்கும்
எழுத்துக்கள்
இவை யாதும் இன்றி
எமக்கில்லை கனவு

கனவுகளின் பங்களிப்பில்
கவிதை முளைவிடின்
இன்னும் எழா .. எழுதா ...
கவிதைகள்
காற்று வெளி
திரை சீலை
புங்கை மரம்
பால் வீதி
பேனா முனை யெங்கும்
வியாபித்திருக்கும்
கருவெட்டா
அணுக்களாய்...



Kelango_rahul@yahoo.com


நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் : 17 .01 .2011


Sunday January 30, 2011

ஹைக்கூ கொத்து

கொ.மா.கோ.இளங்கோ





தாத்தா கட்டிய வீடு
குடியேறியிருக்கும்
சிலந்தியின் வாரிசு




இரும்பு சத்து குறைவு
சிவப்பு மாத்திரை விழுங்கும்
அந்தி





உடலுறுப்பு தான பதிவேடு
கையெழுத்திட்டாள்
ஐந்தாம் நிலை சிறுமி




மழை பெய்த நாள்
திருடு போகும்
மண் வாசம்




குளம் நிறைய நீர்
குளிக்க பயந்து
தாமரை பூக்கள்




மின்னல் மின்னும்
இடி தொடரும்
குடிசையில் வானொலி


நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் : 30 .01 .2011
 



Sunday February 6, 2011

வாண்டு பருவமும் வயதான கிழவியும்

கொ.மா.கோ.இளங்கோ





'சொர்க்கு
தவளை நீச்சல்
பேக் சார்ட்
பூசணிக்காய்
பல்டி
சப்பை கட்டு
முங்குளி பாம்பு '
கண்மாய் மூழ்கி குளித்ததில்
பொடுசுகள் கண்டெடுத்த பெயர்கள்
மூன்று மணி நேர குளியல்
உள்ளம் உலகம் உலவி வரும்
உற்சாகம் குளத்தின் தரை தொடும்
என்னோடு சேர்த்து
நான்கு வாண்டுகள்

'ஊளை' சந்திரன்
'சீழ்' முருகேசன்
'இங்கு மண்டை'
'சுண்டெலி' பாபு
வகுப்பறை அணிவித்த
தேன் தமிழ் பட்டங்கள்

வாரமிருமுறை
பாடசாலைக்கு முழுக்கு
கண்மாய்க்கரை 'மஞ்சனத்தி மரம்'
'பைகட்டுகளின்' சேமிப்பு கிடங்கு
புத்தகமும் பரீட்சையும் புளிக்கும்
மதிப்பெண் அட்டை கிடைக்கப்பெறும்
முந்தைய நாட்களில்
'ஊமத்தம் பூ' பலன் சொல்லும்
சத்தம் எழுப்பி பூ உடையின்
தமிழ் தேர்வில் பாஸ்

ஊர் மேய்ந்த பொழுதுகள்
வீண் வம்பிழுத்த வாதங்கள்
கணக்கிலில்லை
குண்டு சோடா கோலியாட்டம்
குதூகல கொண்டாட்டம்
'ஏத்தி பித்தி '
'வை ராஜா வை '
' தட்டு தாம்பூலம் '
'கள்ளம் போலீஸ்'
' பிலிம் கட்டு சேர்க்கை'
வீரமேரிய விளையாட்டுகள்
தினந்தோறும்
தோற்ற நினைவு தான்

காது இழுத்து பிடுங்கும்
பிச்சையம்மாள் டீச்சர்
மேசைமேல் முட்டியிட வைக்கும்
மார்த்தாண்டம் வாத்தியார்

சின்ன வயசு கூத்து
செயல் பிழைகள்
சிங்காரப்பருவம்
மீண்டு வருவதற்கில்லை
முண்டியடித்து புகுந்து
முரண்டு செய்து
தட்டில் நிரப்பிக்கொள்ளும்
மதிய சத்துணவு
'கம்மங்கதிரு மிட்டாய்' விற்கும்
கிழவியுடன் பகிர்ந்துன்பேன்
அவள் பிசையும் உருளைகள்
மிட்டாயை மிஞ்சி இனிக்கும்

அதன் பின்
கிழவியை யாரும்
பள்ளிக்கூடம் பக்கம்
பார்த்ததே இல்லையாம் ...





நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் :06 .02 .2011







Sunday February 13, 2011

ஹைக்கூ கொத்து – 2

கொ .மா.கோ.இளங்கோ




உழுத நிலம்
உரமாகி போகும்
மண் புழுக்கள்

பேருந்து நிறுத்தம்
முந்தினர் பலர்
வழியின்றி திணறும் காற்று

சேவல் கூவும் அதிகாலை
விழித்து கொள்கிறான்
ஆதவன்

உடல் கெடுத்த பாவம்
உயிர் வளர்த்து பார்க்கும்
மது குப்பியுள் பூங்கொடி

வாசல் கதவு தாண்டும்
முயற்சியில் குழந்தை
முந்திக்கொண்டது மூத்திரம்

சாலையோர விபத்து
சிறுமி பிழைத்தாள்
எறியப்பட்ட பூக்கள்


நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் :13 .02 .2011

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்--

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

1. வளியின் உள்ளீடற்ற ஓசை...
வளியின் ஊடுருவல்
இசைக்கான தபால் தலை
நடை, தாளம், ஜதை
அசைவு, முத்திரை, பாவனைகள்
விலாசம் நிரப்பிய கடிதங்கள்
நடனம் பட்டுவாடா
ஒலியின் உந்து காற்று
தீண்டல், தழுவல், வருடல்
உயிர்ப்பித்தல், அரவணைப்பு
உணர்வூட்டல், படர்பித்தல்
சுவாசித்தல், உலர்வித்தல்
சுடர்வித்தல், நடைப்பித்தல்
அசைவித்தல், ஒளிர்வித்தல்
சலசலப்பு, அழுவித்தல்
நெகிழ் வூட்டல், விரித்தல்
பிரித்தல், குளிர்வித்தல்
வளர்த்தல், கேட்ப்பித்தல்
தொய்வித்தல், தாழ்வித்தல்
தளிர்த்தல், பறத்தல்
பூப்பித்தல், பகுத்தல்
அனைத்தும்
வளியின் பூரண முகவரிகள்!
அண்ட அசைவின்
மைய தந்தி காற்று

வளிபுகா வழித்தடத்தில்
ஓசை உணர்கிறேன்
நான்மட்டும் !
சலசலத்து பாயும் வெள்ளம்
ஆழம் மிகுந்த நீரடியுள்
தங்கி உருளும்
கூழாங்கற்களின்
உரசல் ஓசை
கேட்கிறது காதுகளுள்...
காற்றின் ஏமாற்றம் கலந்து!

2. அன்பிலார் எல்லாம் தூண்டில் !
சுரம் தப்பிய மனசு
அறிந்திராது வீழும்
வேண்டப்பட்ட பிசாசுகள்
வீசிய தூண்டிலில்

செலவாகி தவிக்கும்
வாழ்வின் எச்சம்
தக்கை உருளையேறி மிதக்க
தொடர் நெருங்கும் உறுத்தல்கள்
நட்புப் பேழையுள்
விஷம் துப்பி நிரப்பும்

அறியா காலம்
வஞ்சக சூழல்
பொன்னினிமை பொய்முகங்கள்
உயிர் மென்மை உறிந்து மகிழும்
அட்டை குழுக்கள்
அவசரமாய் இருள் புகுத்த
தன்னிலை உணரா சக்தி தோய்ந்து
வீழுகிற உள்ளம்
தண்டுவடம் கிழிபட்டு
தூண்டில் சிக்கும்

காயம் பதிந்த ஜீவன்
யாரும் இலா சூழலில்
தனிமை பருகி
குற்றம் பதியா கோப்பின்
நகல் துடைத்து
மீண்டும் மலர்ந்த நாட்களை
சுவாசிக்க தயாராகும்
உயிர் ஒட்டிக்கொள்ளும் ...
இனி
உதிர்ந்த செதில்கள்.

Kelango_rahul@yahoo.com



' பதிவுகள் ' இணைய இதழில் வெளியான கவிதைகள் .
மார்ச் ' 2011




சுதந்திரம் தாத்தாவுக்கு வாய்க்கரிசி !

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 


செங்கதிரோன்
சிறுவாணி
கொல்லையில்
துயில்
எழுந்த நண்பகல்
புறப்பட
தயாராகும்
'சுதந்திரம்' தாத்தாவின்
இறுதி
ஊர்வலம்
மாலை
, தப்பட்ட மரியாதை சகா
மனையுள் மார்தட்டி ஓலமிடும் 
மாதர் சங்கமத்தை விஞ்சி  
பெருமகன் பேணிய 
பண்ணை புறாக்களின்
'பொளக்''பொளக்''பொளக்' 

கண்ணீரை பீய்ச்சி வரவழைக்கும்
 

யதார்த்தம் சரிந்த சமுகப் பிணியுள்
'மனிதம்' சுரம் பிடித்த
ஆர்மோனியம்  

ஆசை நட்டு வளர்த்த அமைதியின்  
அச்சாணிப் பூக்கள் 
 அறுபத்து நான்கு புறாக்கள் 
எதிர் வரும் நாட்களில்  
யார் கூடும் சாவடியில்
மனு சேர்ப்பிக்கலாகும்
 

மீண்டுமொரு முகவரிக்காக...  
நெல் வீசி கொஞ்சிப் பழக  
நெஞ்சங்களின் பற்றாக்குறையல்லவே!
 

காடு சேர்ந்தார் தாத்தா
காரியங்கள் நடந்தேறின
படியேற்றிய பாதம்
பணிந்தனர் பலர்  

தகன வளர்ப்பு தயார்
வாக்கின் நம்பிக்கைக்கு  

வாய்க்கரிசி மணிகள்  
இதயம் பிரிந்த ஒரு துளி ரத்தம்  
எங்கோ கசிந்து மடியும் 
 இருள் கவ்விய வானம்  
எழத்துடித்த வேளள கண்ணில் பட்டது...  
சாம்பல் நிற புறாவொன்று
அலகு நிறைய
குருமணி குவியலோடு
!




நன்றி :  ' கீற்று ' இணைய இதழ்








துக்கமெனும் நாய்க்குட்டி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 


மனதுக்கு பக்கம்
நிறைவாய்
மயங்கிய நிலையில்
வால் சுருட்டி கண் அயரும்
துக்கம்
நாய் குட்டியை நினைவுபடுத்தும்.
கூர் உச்சி மலையில்
ஈக்களை புறமகற்றி
தேன் துளி சுவைப்பதில்
சுகம் வகுப்படுமாயின்
பிரதி வேளை
பற்றுதலோடு வாழ்ந்து காட்டுவேன்
சின்ன சின்ன ஆறுதல்கள்
ரொட்டித் துண்டுகளாய்...
துக்க நாய் குட்டி
இன்னமும் முன்னேறி
மனதின் அருகாமையில்
எச்சில் வடித்தபடி!
- கொ.மா.கோ.இளங்கோ ( kmkelango@gmail.com)இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்






நன்றி :  ' கீற்று ' இணைய இதழ்





வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2011-01-01 


picture for poem
பதுக்கிய அதிர்வுகள்
கொ.மா.கோ.இளங்கோ


இவரின் பிற கவிதைகள்
 


பதுக்கிய அதிர்வுகள்
-----------------------------


யாரும் அறியாமல்
பதுக்கி வைத்திருக்கிறான்
அவனுக்கு மட்டுமே விளங்கும்
அன்பு அதிர்வுகளை


மிதிவண்டி காதைக்குள்
நளன் எனக்கொண்டன்
புறநகர் பள்ளியில்
பத்தை எட்டிய
தமயந்தி


கண்கள் பாய்ச்சி
கைகள் பறக்கவிட்டு
காதல் காற்றின் அகம் சுவாசித்து
இதழ்கள் எச்சில் விழுங்கிய நாட்கள்


பேருந்தை துரத்தி துரத்தி
இணைப்பு அறுந்துபோன மிதிவண்டி
கனவு கண்ட மறுநாள்
காத்திருக்கும் அவள்
'கிணிங் ''கிணிங் ' சவாரிக்காக


தொடர்ந்தனர்
தொடர்ந்தது
வசந்தத்திற்கு பின்பு துரத்திய காலம்
துருவேற்றியது அன்பில்


காற்றிலா சக்கரத்து நடுவில்
காய்ந்து கிடககிறானவன்


யாரும் அறியாமல்
பதுக்கி வைத்திருக்கிறான்
அவனுக்கு மட்டுமே விளங்கும்
அன்பு அதிர்வுகளை
வண்டி சக்கரத்தில் மிஞ்சியிருக்கும்
முப்பத்தேழு ஆரங்களுக்குள் .


நன்றி :  ' வார்ப்பு  ' இணைய இதழ்